நாளை வாக்கு எண்ணிக்கை.. உபி பாதுகாப்பு பணியில் துணை ராணுவம், 70 ஆயிரம் போலீஸ்: தேர்தல் ஆணையம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் போலீஸ் மற்றும் பாரா மிலிட்டரி பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில்ல் வாக்கு எண்ணிக்கையின் போது, கலவரம் நடக்கலாம் என எண்ணி பாதுகாப்பை பலப்படுத்துகிறது தேர்தல் ஆணையம்.
அரியாசனம் யாருக்கு? நாளை உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை முதல் எண்ணப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்குமுனை போட்டி நிலவியது. உபி.யில் தற்போது பாஜக ஆட்சி நடந்துவருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டது.
பெரும்பான்மை
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, உத்தரப்பிரதேசத்தில் பாஜக கிட்டத்தட்ட 300 இடங்களைக் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. சமாஜ்வாதி கட்சி 200க்குள் வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால், இந்த கருத்துக்கணிப்பால், சமாஜ்வாதி கட்சி சோகத்தில் இருக்கிறது.
அகிலேஷ் யாதவ்
2017 தேர்தலில் ஆட்சியை பாஜகவிடம் இழந்தது சமாஜ்வாதி. அதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நோக்கில் செயல்பட்டது சமாஜ்வாதி. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அகிலேஷ் யாதவ், இதுகுறித்து கூறுகையில், மக்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற நடக்கும் கடைசி போர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு
நாளை வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்படாமல் இருக்க, மாநிலம் முழுவதும் 70000 போலீஸார், 245 கம்பெனி பாராமிலிட்டரி, 69 கம்பெனி பி.எஸ்.இ பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். நாளை மாநில அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதற்றமான இடங்களில் அதிக பாதுகாப்பு போடப்படும் என்றும் உபி மாநில சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.