'துப்பாக்கி வைச்சு இருக்காங்க,என்னைகூட அறைஞ்சுட்டாங்க சார்..' உபி-இல் போலீஸை தாக்கி பாஜகவினர் அடாவடி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தன்னை பாஜகவின் அறைந்ததாகக் காவலர் ஒருவர் உயர் அதிகாரிக்குப் புகார் அளிக்கும் வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா 2ஆம் அலை காரணமாக உ.பி-இல் பாஜக படுதோல்வி அடையும் என அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் தான் உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

திடீர் மோதல்
இதையடுத்து அங்குள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வன்முறை மூண்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பாஜக தொண்டர்களும் சமாஜ்வாடி தொண்டர்களும் மோதிக் கொள்வதாகச் செய்திகள் வெளியாகின. கற்கள், கம்புகள், துப்பாக்கிகள், பெட்ரோல் வெடிகுண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு
ஹத்ராஸ் பகுதியில் சமாஜ்வாடி தலைவர் ஒருவர் இந்த வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இப்படி மாநிலம் முழுவதும் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார்
வன்முறை ஏற்பட்டுள்ள இடங்களில் போலீசார் போதியளவு இல்லை. வெறும் லத்திகளை மட்டுமே கொண்ட வன்முறையை ஒடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும், போலீசாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சில இடங்களில் போலீசார மீதும்கூட தாக்குதல் நடந்துள்ளன.
|
எஸ்பி-க்கு அறை
இந்நிலையில், எஸ்பி ஒருவர் பாஜகவினர் தன்னை தாக்கியதாக்க உயர் அதிகாரியிடம் பேசும் வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் குமார், "இவர்கள் செங்கற்களை வீசு தாக்குகிறார்கள். அவர்கள் என்னையும்கூட அறைந்தார்கள். அவர்கள் வெடிகுண்டுகளையும் வைத்துள்ளனர். பாஜகவைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ மற்றும் மாவட்டத் தலைவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தனது உயர் அதிகாரியிடம் ஃபோனில் புகார் அளிக்கிறார்.

உரிய விசாரணை
இது குறித்து மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் எட்டாவா பிரஜேஷ் குமார் சிங் கூறுகையில், "அந்த கும்பல் வாக்குச் சாவடிக்கு அருகில் வருவதைத் தடுக்கும்போது தான் இந்த வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் எங்களிடம் உள்ளன. தேர்தல் முடிந்ததும் இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்" என்றார்.

எதிர்க்கட்சிகள் சாடல்
இந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 349 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும், இந்தத் தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன. மேலும், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வன்முறைக்கும் பாஜகவே காரணம் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications