101 வயது தாத்தா முதல் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த அம்சா வரை - உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்
தமிழகத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 101 வயது தாத்தா முதல் நோயினால் பாதிக்கப்பட்டாலும் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த அம்சா வரை பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன.
மதுரை: முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் முதல்...நூறு வயதை தாண்டியும் ஜனநாயகக் கடமையாற்றுவேன் என்று கூறி வாக்களிக்க வந்த மூத்த குடிமக்கள் வரை வாக்குச்சாவடியில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. உடல் நலம் குன்றிய நிலையிலும் ஆம்புலன்ஸ்சில் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர் வாக்காளர்கள்.
Recommended Video
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட காவலர்கள் 1.13 லட்சம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 2.83 கோடி வாக்களிக்கின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பல சுவாரஸ்யங்கள் நடந்து வருகின்றன.

101 வயது தாத்தா
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 101 வயது முதியவர் முண்டன் என்பவர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தார். தனக்கு 101 வயது ஆவதாக அவர் தெரிவித்த நிலையில், அவரது வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் அவருடைய பிறந்தநாள் கணக்குப்படி அவருக்கு 77 வயது மட்டுமே ஆவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

95 வயது பாட்டி
அதே போல பீமா பீவி என்ற 80 வயது மூதாட்டி வாக்களித்ததிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள வார்டு எண் 15-ல் ராமுத்தாய் என்ற 95 வயது மூதாட்டி உடல்நிலை சரியில்லாத நிலையிலும் திருமங்கலத்தில் உள்ள அல் அமீன் பள்ளியில் வாக்களிப்பதற்காக தனது மகளுடன் வந்து வாக்களித்தார்.

ஆம்புலன்ஸ்சில் வந்து வாக்களித்த பெண்கள்
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 31வது வார்டுக்கு உட்பட திருமலைசாமி புரத்தில் வசித்து வருபவர் அம்சா இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். பின்னர் அவரால் நடந்து செல்ல இயலாது என்பதால் ஸ்டெக்சர் மூலம் வாக்குச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அவர் தெரிவித்த சின்னத்திற்கு தேர்தல் அதிகாரி வாக்களித்தார்.

ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்
இதே போல ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்களித்தார் கோவிந்தம்மாள் என்ற பெண். இதே போல நிறைமாத கர்ப்பிணிப் பெண்களும், குழந்தை பிரசவித்து கைக்குழந்தையுடன் வந்தும் வாக்காளர்கள் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர்.

விமானத்தில் பறந்து வந்த வாக்காளர்
சர்க்கார் பட பாணியில் அமெரிக்காவில் இருந்து காஞ்சிபுரம் வந்து வாக்களித்தார் தொழிலதிபர் ஒருவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் இந்தியாஸ் ஷெரீப் என்பவர் விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து காஞ்சிபுரம் வந்து வாக்களித்தார். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஜனநாயகக் கடமையாற்ற காஞ்சிபுரம் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

98 வயது பாட்டியின் உற்சாகம்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் 4 வார்டில் 98 வயது பெண் மூதாட்டி சரசு என்பவர் தன்னிச்சையாக நடந்து வந்து உற்சாகமாக வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினர் அதுமட்டுமல்லாமல் அதே மையத்தில் உள்ள 1 வார்டில் சத்யா என்ற பெண் 3 நாள் கைக்குழந்தையுடனும் கலைச்செல்வி என்ற பெண் 3 மாத கைக்குழந்தையுடன் வந்து வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications