நிலம் மட்டுமே 500 ஏக்கர்! கரூரில் 508 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்கும் வழக்கில் மதுரை ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: கரூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரை புகார்கள் சென்றுள்ளன.. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.. இந்நிலையில், கரூரில் கோயிலுக்கு சொந்தமான 508 ஏக்கர் நிலத்தை மீட்பது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கரூர் ஆட்சியர், எஸ்.பி. உட்பட 17 பேர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த திருத்தொண்டர் சபையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் சமீபத்தில் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கரூர் மாவட்டத்தில் உள்ள 64 கோவில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஆனால், இந்த சொத்துக்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. சில சொத்துக்கள் பட்டா பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, கோவில் சொத்துக்களை மீட்டு, இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளுக்கு உட்பட்டு பராமரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
500 ஏக்கர் நிலங்கள்
இந்த மனுவை கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் விசாரித்தனர்.. அப்போது மனுதாரர் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜராகி, கடந்த 2015ல் கோவில் நிலங்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஒரு அறிக்கை தயார் செய்தது. ஆனால், அந்த அறிக்கை மாயமாகி விட்டது.
இப்போது ஆக்கிரமிப்பில் உள்ள 500 ஏக்கர் நிலங்களின் மதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். எனவே, கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
கரூர் மாவட்ட கோயில்கள்
இதனை பதிவு செய்த நீதிபதிகள், "கரூர் மாவட்டத்தில் எத்தனை கோவில்கள் உள்ளன? அந்த கோவில்களின் சொத்து விவரங்கள் எவ்வளவு? அதில் எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது? எத்தனை கடைகள் உள்ளது? அதற்கான வருமானங்கள் எவ்வளவு? ஆக்கிரமிப்புகளை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்பதை கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
2015-ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படும் கோப்பையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர்.
507.88 ஏக்கர் நிலம்
இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், "கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 507.88 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு தற்போது விசாரித்தது.. அப்போது, "கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டு 6 வருடங்களாகியும் இதுவரை நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
நாளை மறுநாள் மீண்டும் விசாரணை
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் கரூர் எஸ்.பி. எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார்.
அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications