விக்கிபீடியாவில் என் தாய் குறித்து தவறான தகவல்! தயவுசெய்து அழித்துவிடுங்கள்! நடிகர் வடிவேல் உருக்கம்
மதுரை: விக்கிபீடியாவில் தனது தாய் குறித்து தவறான தகவல் உள்ளதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். மேலும் அந்த தகவலை நீக்கிவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சினிமா திரையுலகை ஒரு கலக்கு கலக்கி வருபவர் வைகை புயல் வடிவேல். கோபம், சிரிப்பு, அழுகை, நக்கல், நய்யாண்டி என எதுவாக இருந்தாலும் வடிவேலின் பாடி லேங்குவேஜ் பேசும். அவருடைய நாடி, நரம்பெல்லாம் காமெடி செய்யும் அளவுக்கு அவருடைய ஃபெர்பாமன்ஸ் இருக்கும்.
மீம்ஸ்களில் வடிவேல் டெம்ப்ளேட் இல்லாத மீம்ஸே இல்லை என சொல்லலாம். கடுமையான வேலை செய்துவிட்டு வந்து ரிலாக்ஸாக டிவியை ஆன் செய்தால் வடிவேல் காமெடி வந்தாலே போதும். கவலை எல்லாம் ஆளாய் பறந்துவிடும்.
ஆறு முதல் வின்னர் வரை.. பொன்னிநதி பாக்கணுமே பாடலுக்கு படுஜோராக பொருந்தும் வடிவேல்!
ரெட் கார்டு
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதால் கடந்த 10 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் நடிகர் வடிவேலு. இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
87 வயதாகும் தாய்
அவருக்கு 87 வயதாகும். அவர் மதுரை வீரகனூர் அருகே வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரோஜினி அம்மாள், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சரோஜினி அம்மாளின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மு.க.அழகிரி நேரில் ஆறுதல்
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வைகைப்புயல் வடிவேலுவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அது போல் முதல்வர் ஸ்டாலின், வடிவேலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் நடிகர் வடிவேலு தனது தாயார் மரணம் குறித்து பேசியுள்ளார். அதில் எனது தாய் சரோஜினி நேற்று இரவு உடல்நலக் குறைபாடு காரணமாக மறைந்துவிட்டார்.
சிரமம்
அவர் யாருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என பொங்கல் பண்டிகையை நல்லபடியாக கொண்டாடியுள்ளார், கடைசி வரைக்கும் அவர் யாருக்குமே தொந்தரவு கொடுக்காமல் தானாக நடந்தார், தான் வளர்க்கும் ஆடு, மாடுகளை எல்லாம் பிடித்து பொங்கலை கொண்டாடினார். திடீரென மரணமடைந்துவிட்டார். முதல்வர் ஸ்டாலினும் என்னை போனில் தொடர்பு கொண்டு அம்மாவின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்தார்.
விக்கிபீடியா
விக்கிபீடியாவில் என அம்மா பற்றி தவறான தகவல் உள்ளது. என் அம்மாவின் பெயர் பாப்பா என்கிற சரோஜினி. சிறு வயதில் அவரை பாப்பா என அழைப்பார்கள். ஆனால் அவருடைய பெயர் சரோஜினிதான். விக்கிபீடியாவில் வைத்தீஸ்வரி என தவறுதலாக உள்ளது. எனவே அதை அழித்துவிடுங்கள் என வடிவேல் உருக்கமாக தெரிவித்துள்ளார்.