தொடர்ந்து 9-வது ஆண்டாக பொங்கல் கொண்டாடாத செல்லூர் ராஜூ! சோகமான பின்னணி இது தான்!!
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து 9-வது ஆண்டாக பொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்துடன் தவிர்த்திருக்கிறார்.
இதன் பின்னணியில் செல்லூர் ராஜூவின் ஒரே மகன் கடந்த 2012-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த சோகமான நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது.
மகன் மறைவைத் தொடர்ந்து தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகையையும் செல்லூர் ராஜுவும் அவரது மனைவியும் கடந்த பல வருடங்களாக கொண்டாடுவது கிடையாதாம்.

பொங்கல் திருவிழா
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒரு புறம் நடக்க மற்றொருபுறம் மதுரை மண்ணிற்கே உரிய பாரம்பரிய பண்பாட்டுடன் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன. இந்தச் சூழலில் மதுரையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ பொங்கல் கொண்டாடமாட்டார் என நமக்கு தகவல் கிடைத்தது.

செல்லூர் ராஜூ
இதையடுத்து அவரிடமே இது குறித்து அறிவதற்காக நாம் தொடர்பு கொண்டு பேசினோம், ''ஆமாம் தம்பி நீங்க கேள்விப்பட்டது உண்மை தான். எனக்கு பொங்கல் பண்டிகை கிடையாது. எனது மகன் விபத்தில் உயிரிழந்தது முதல் நான் பெரிதாக பண்டிகையை கொண்டாடுவதில்லை. கட்சிக்காரர்களுக்கு மட்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். என்னை சந்திக்க வருபவர்களை சந்திப்பேன். மற்றபடி கொண்டாட்டமெல்லாம் எங்க வீட்டில் பெரிதாக இருக்காது'' என சோகமான பின்னணியை விவரித்தார்.

கலகலப்பானவர்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை பொறுத்தவரை கலகலப்பானவராக அறியப்படக் கூடியவர். செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்ட மேடைகளாக இருந்தாலும் சரி அவரிடம் இருந்து வெளிவரும் கருத்துக்கள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறதோ இல்லையோ நிச்சயம் வைரலாகி சமூக வலைதளவாசிகளுக்கு தீனி போடும். அதேபோல் தெர்மோகோல், வைகை நதியை தேம்ஸ் நதியாக மாற்றுவது, மதுரை நகரை ஆஸ்திரேலியாவின் சிட்னியை போல் மாற்றுவது என இவர் கொடுத்த பேட்டிகள் காலத்தால் அழியாதவைகளாகும்.

மகனுக்கு அஞ்சலி
மேலும், மறைந்த மகன் தமிழ்மணி பொங்கல் தினத்தன்று பிறந்ததால் அன்றைய தினம் அவருக்கு அஞ்சலி செலுத்துவதை மட்டும் வழக்கமாக கொண்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. எப்போதுமே பொதுவிடங்களில் சிரித்த முகத்துடன் வலம் வரும் அவருக்குள்ளும் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications