பார்முலா-4 ரேஸ்..ஒரு கோடி கேட்டு மிரட்டுறாங்க! மிரண்டு ஓடும் நிறுவனங்கள்..அதிர வைத்த ஆர்பி உதயகுமார்
மதுரை: சென்னையில் நடக்கவிருக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸுக்காக தொழில் நிறுவனங்களை மிரட்டி வசூல் செய்யப்படுகிறது. இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் தர முன் வருவாரா? எனவும், முதலமைச்சர் மதுரைக்கு சிறப்பு நிதி தருவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய அதிமுகவின் சார்பில் வயலூரில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமர் தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

தொடர்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,” அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும் அதேபோன்று, திண்ணைப் பிரச்சாரங்களை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டிருந்தார். அதன்படி நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னையில் கார் ரேஸ் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு அரசின் பணம் எதுவும் செலவு செய்யவில்லை விளம்பரதாரர்கள் நிதியால் நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கார் ரேஸ் நடத்த திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பந்தயத்திற்காக 42 கோடி அளவில் அரசின் பணம் செலவழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து மிக்ஸாம் புயல் காரணமாக கார் ரேஸ் ரத்து செய்யப்பட்டது. தற்போது கார் ரேஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல புகார்கள் வருகிறது. போதிய பாதுகாப்பு இல்லை, உயிர் இழப்பு ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுந்து வருகிறது. இது மட்டுமல்ல தொழில் நிறுவனங்களிடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த கார் ரேஸ் பந்தியதற்காக 25000 ரூபாய் முதல் ஒரு கோடி வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நிதி வழங்கவில்லை என்றால் சிக்கல்கள் ஏற்படும் என்று தொழில் முனைவோர்கள் குழம்பி வருகிறார்கள். .இந்த கார் ரேஸ் நடத்தும் தலைவர் உதயநிதி நண்பர் அகிலேஷ் ரெட்டி ஆவார். குறிப்பாக சென்னை, கோவை, கரூர் ,ஈரோடு போன்ற மாவட்டங்களில் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த செய்தியை உண்மை இல்லை என்றால் பாரிசில் ஒலிம்பிக் போட்டி காண சென்றிருக்கும் உதயநிதி விளக்கம் தர முன் வருவாரா?
அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது, தற்போது காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை, திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் வட்ட செயலாளர்கள் முதல் மாவட்ட செயளாலர்கள் வரை காவல்துறையை கைபாவையாக செயல்படுத்துவார்கள். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் சர்வசாதாரணமாக உலவுகிறது. புத்தகப்பை சுமக்கும் மாணவர்கள் கஞ்சாவை சுமக்கும் நிலை உள்ளது அதேபோன்று தமிழகத்தில் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது.
கத்தரிக்காய், வாழக்காய் வெட்டுவது போல மனிதர்களை வெட்டுகிறார்கள். இது குறித்து எடப்பாடியார் தொடர்ந்து கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க அரசு முன்வரவில்லை. அதனை தொடர்ந்து அதிகாரிகளின் தொடர் மாற்றம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 65 அதிகாரிகளை இடமாற்றம் செய்தார்கள். அதனை தொடர்ந்து 46 அதிகாரிகளை இடமாற்றம் செய்தார்கள். தற்போது 56 அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார்கள்.
மதுரையின் வளர்ச்சி, பாரம்பரியம் குறித்து மாமதுரை நிகழ்ச்சி நடைபெற்றது இதை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மதுரை வளர்ச்சிக்கு சிறப்பு நிதி தருவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒரு பைசா கூட ஒதுக்காமல் தனது வார்த்தை ஜாலத்தால் நிறைவு செய்துள்ளார். இதே மதுரைக்கு அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி உள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications