விளம்பரத்திற்காக சட்டையை கிழிக்க மாட்டோம்.. மக்கள் பிரச்சினையை மட்டுமே பேசுவோம்.. செல்லூர் ராஜு!
மதுரை: சட்டமன்றத்தில் மக்கள் சார்ந்த பிரச்சினையை மட்டுமே பேசுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அடுத்தக் கட்டமாக தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் கடிதம் எழுதினார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளின் முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பித்தனர். அதன்படி மதுரையின் பல்வேறு எம்எல்ஏ-க்கள் கோரிக்கைகளை வழங்கினர்.

ஆய்வுக் கூட்டம்
இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜு உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிடிஆர் பேச்சால் பரபரப்பு
இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கைகளின் சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது என பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ க்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து செல்வதாக எழுந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செல்லூர் ராஜு பேட்டி
இதனைத்தொடர்ந்து வெளியே செல்ல முற்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்களை அமைச்சர் மூர்த்தி சமதானம் செய்து அமர வைத்தார். இதன்பின்னர்
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், மக்கள் பிரச்சினை குறித்து பேசினால் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசு அதிகாரி போலவே பேசுகிறார். மதுரையில் 2 இலட்சம் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. நிதியே ஒதுக்கீடு செய்யாமல் சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் கோரிக்கை கேட்டு என்ன பயன் கிடைக்க போகிறது என தெரியவில்லை என்று விமர்சித்தார்.

செல்லூர் ராஜு கிண்டல்
தொடர்ந்து சட்டமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் சார்ந்த பிரச்சினையை தான் அதிமுக முன்னெடுக்கும். அதிமுகவைப் பொறுத்த வரை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எப்போதும் மக்களுடைய பிரச்சினை தான் எடுத்துப் பேசுவார். தனிப்பட்ட பிரச்சினை பற்றி எதுவும் பேச மாட்டார். விளம்பரத்திற்காக சட்டையை கூட கிழிக்க மாட்டார். தெருவுக்கு எல்லாம் வர மாட்டோம். அதை நீங்கள் முழுமையாக நம்பலாம். நாங்கள் எடுத்து வைக்கின்ற வாதம் முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையாக இருக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications