வைகைக் கரையின் தங்க மகள்! அர்ஜுனா விருதை அள்ளிய ஜெர்லின் அனிகா! சோதனைகளை சாதனையாக்கியது எப்படி?
மதுரை : மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகாவிற்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளநிலையில், அவர் யார்? அவரது பின்னணி என்ன? பல தடைகளை தாண்டி சாதித்தது எப்படி என பார்க்கலாம்..
மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2022 தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்துள்ளது. இதில் 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்த 18 வயதே ஆன மதுரை மாநகராட்சியைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகாவுக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மதுரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜெர்லின் அனிகா
இந்நிலையில் ஜெர்லினுக்கு உயரிய அர்ஜூனாவிருது கிடைத்தது எல்லையில்லா மகிழ்ச்சி , ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது அவரது ஆசை என கூறுகின்றனர் அவரது பெற்றோரும், பயிற்சியாளரும். மதுரை வில்லாபுரம் பகுதியை சோ்ந்தவர் ஜெயரட்சகன், லீமாரோஸ்லின் தம்பதியரின் மகள் ஜொ்லீன் அனிகா.
பாட்மிட்டன்
18 வயதான இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி. பள்ளிப்படிப்பை மாநகராட்சி பள்ளியில் பயின்ற நிலையில் விளையாட்டின் மீது ஆர்வம் திரும்பியது. இவர் சிறு வயது முதலே பாட்மிட்டன் விளையாட்டில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் தொடர்ந்து 3 ஆண்டுகளில் 2017 ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற DURF ஒலிம்பிக்கில் 5வது இடமும், 2018 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் 2 வெள்ளிப் பதக்கங்களும் 1 வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
வெற்றி சாதனைகள்
தொடர்ந்து சைனீஸ் தைபேயில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 1 தங்கப்பதக்கமும் 2 வெள்ளிப் பதக்கங்களும் 1 வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவு போட்டியில் பெண்கள் பிரிவு, கலப்பு இரட்டையர், பெண்கள் இரட்டையர் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 தங்க பதக்கம் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவிலும் போட்டியிலும் 3 தங்க பதக்கம் என 6 தங்க பதக்கங்களை வென்று சாதனை செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கொண்டாட்டம்
மாற்று திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா பல்வேறு நாடுகளுக்கு சென்று வெற்றி பதக்கங்கள் வென்றுவந்துள்ளார். இந்நிலையில் காதுகேளாதோர் விளையாட்டு வீராங்கனைக்கான உயரிய விருதான அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதனையடுத்து ஜெர்லின் அனிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விரைவில் டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜெர்லின் அனிகா கலந்து கொண்டு அர்ஜுனா விருதைப் பெற இருக்கிறார். இதனையடுத்து அவரை கொண்டாடி வருகின்றனர் மதுரை மக்கள்.