7 நாட்கள் முழு லாக்டவுன் அமல் - முடங்கியது மதுரை- மாவட்ட எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தம்
மதுரை: கொரோனா பரவுவதைத் தடுக்க மதுரையில் 7 நாட்கள் முழு லாக்டவுன் மீண்டும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து மதுரை மாநகராட்சி பகுதி முழுவதுமாக முடங்கி போயுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்ததால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. லாக்டவுன் காலத்தில் காய்ச்சல் கண்டறிதல் முகாம்கள் உள்ளிட்டவைகளை நடத்தி கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
7 நாட்கள் முழு லாக்டவுன் அமல் - முடங்கியது மதுரை- மாவட்ட எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தம்
நள்ளிரவு முதல் லாக்டவுன் அமல்
இதேபோல் மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனையடுத்து மதுரையில் நள்ளிரவு முதல் (24-ந் தேதி அதிகாலை) முதல் 7 நாட்களுக்கு முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மதுரை மாநகராட்சி பகுதிகள் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போய் வெறிச்சோடி காணப்படுகிறது.
மதுரையில் வீதிகள் வெறிச்
மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பகுதிகளில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. எஞ்சிய அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மதுரையின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மாவட்ட எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தம்
மதுரையிம் ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம் ஆகிய பேருந்துகள் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் வாடிப்பட்டியிலேயே நிறுத்தப்பட்டுவிடுகிறது.
தீவிர வாகன சோதனை
மளிகை பொருட்களை வாங்கக் கூட வாகனங்களில் பொதுமக்கள் வரக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதுரையின் அனைத்து சாலைகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். உரிய காரணங்கள் இல்லாமல் வெளியே ஊர் சுற்றும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஏற்கனவே வரும் 28-ல் மதுரையில் அத்தனை கடைகளும் மூடப்பட்டு தீவிரமான லாக்டவுன் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.