அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் காலணி வீசிய வழக்கு - பாஜகவினர் மன்னிப்பு கோர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை : அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் காரில் செருப்பு வீசிய வழக்கில், சம்மந்தப்பட்ட 3 பேரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் வாக்குவாதம் செய்த பாஜகவினர், அவரது கார் மீது காலணியை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் காரில் காலணி வீசியது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 3 பேரின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் காலணி வீசிய வழக்கு - பாஜகவினர் மன்னிப்பு கோர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை விமான நிலையம்
மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் மரணம் அடைந்தார். அவர் உடல் விமான மூலம் மதுரைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அஞ்சலி செலுத்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வெளியே நின்றிருந்தனர்.
10 பேர் கைது
ராணுவ வீரர் லட்சுமணனுக்கு மரியாதை செலுத்திவிட்டு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் சென்ற போது பாஜக தொண்டர்கள் அமைச்சர் காரின் மீது காலணி வீசினர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் முதலில் 10 பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த 10 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
பாஜகவினர் தலைமறைவு
இந்நிலையில் காலணி வீச்சு சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து பாஜகவினரை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். விமான நிலையம் செல்லாத பாஜக நிர்வாகிகளையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். கைதுக்குப் பயந்து மதுரை மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
முன் ஜாமீன் கோரி மனு
அமைச்சர் காரில் செருப்பு வீசிய வழக்கில் பாஜகவைச் சேர்ந்த விளாங்குடி வேங்கை மாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய 3 பேரும் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செத்திருந்தனர்.
மன்னிப்பு கோருங்கள்
இந்த மனு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ள 3 நபர்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்புக்காக ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.