அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம்.. "இது நடந்திருக்க கூடாது" - ஆர்.பி.உதயகுமார் கருத்து!
மதுரை: தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அரசு சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.

செருப்பு வீச்சு
அப்போது அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை வெடித்தது. இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டபோது, பாஜகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை வீசினார்.

ஆர்.பி.உதயகுமார்
இந்த நிலையில் மதுரையில் ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக விளையாட்டு மாநாடு தொடங்கி வைக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஆர்பி உதயகுமார் கூறுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேபோல் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

பிடிஆர் விவகாரம் பற்றி கருத்து
நேற்று மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணின் உடல் கொண்டு வரப்பட்டது. பொதுவாகவே இதுபோன்ற நிகழ்வுகளில், தமிழக அரசு, அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்கப்படுவது மரபான ஒன்று. அந்த மரபை கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லியபோது நானும் அங்கே தான் இருந்தேன். அவர் சொல்லிய வார்த்தை சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை.

இது நடந்திருக்கக் கூடாது
மதுரையில் இதுவரை இப்படியான சம்பவங்கள் நடைபெற்றவில்லை. இது ஒரு கசப்பான சம்பவம். மரபை கடந்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியது சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அதன்பின்னர் முன்னாள் எம்எல்ஏ சரவணனே மன்னிப்பு கோரியது வரவேற்கக்கூடியது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications