''திருமண சடங்குகள் இன்றி பதிவு மட்டும் செய்தால் அங்கீகாரம் கிடையாது''.. கோர்ட்
மதுரை: எந்த ஒரு மதத்தினராக இருந்தாலும் அவர் சார்ந்த மத முறைப்படி, சடங்கு சம்பிரதாயப்படி திருமணம் நடந்தால்தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். அப்படி நடைபெறாமல் நேரடியாக திருமணம் நடந்தால் அந்த திருமணத்தை பதிவு செய்ய முடியாது. அது திருமண அங்கீகாரம் அளிக்காது என மதுரை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் யூஜி பட்டப்படிப்பு வந்தேன்.

மிரட்டி கையெழுத்து பெற்றார்
அப்போது தனது உறவினர் அப்துல் ஹமீது என்பவர் நான் படிக்கும் கல்லூரிக்கு வந்து எனது தாயாருக்கு அடிபட்டு விட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி என்னை கல்லூரியில் இருந்து அழைத்து சென்றார். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பாளையங்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு என்னை அழைத்து சென்ற அப்துல் ஹமீது, கட்டாயப்படுத்தி என்னை புகைப்படம் எடுக்க வைத்ததோடு மிரட்டி ஆவணங்களில் கையெழுத்து பெற்றார்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
அதன்பிறகு எனக்கும் அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பதாக கூறினார். இந்த போலி திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவுத்துறை ஐஜி ஆகியோருக்கு நான் மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை திருமண பதிவை ரத்து செய்யவில்லை. எனவே இந்த போலி திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.

மத முறைப்படி திருமணம் நடந்தால்தான்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், 'எந்த ஒரு மதத்தினராக இருந்தாலும் அவர் சார்ந்த மத முறைப்படி திருமணம் நடந்தால்தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். அப்படி நடைபெறாமல் நேரடியாக திருமணம் நடந்தால் அந்த திருமணத்தை நேரடியாக பதிவு செய்ய முடியாது. தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் 2009-ன் படி திருமண சடங்குகள் எதுவும் செய்யாமல், இந்த சட்டத்தின் கீழ் ஒரு திருமணத்தை பதிவு செய்ய முடியாது.

போலியாக எடுத்துக்கொள்ளப்படும்
இஸ்லாமியர்களை பொருத்தவரை ஜமாத்தில் அனுமதி பெற்று அவர்களின் மத நடைமுறைப்படி திருமணம் நடைபெற்றிருந்தால் மட்டுமே பதிவு செய்ய இயலும். எனவே, திருமணத்தை பதிவு செய்ய வரும் தம்பதிகள் சட்டப்படி திருமணம் நடந்த பிறகே வருகின்றனரா? என்பதை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். திருமணம் நடைபெற்றதை உறுதி செய்யாமல் வழங்கப்படும் திருமண பதிவு சான்றிதழ்கள் போலியானதாக எடுத்துக்கொள்ளப்படும்.

சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது
இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரருக்கு அவர் சார்ந்த மத சட்டப்படி திருமணம் நடக்கவில்லை. எனவே மனுதாரருக்கு திருமணம் நடந்ததாக வழங்கப்பட்ட சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications