'கூண்டுக்கிளியாக இருக்கும் சிபிஐ..' தன்னாட்சி அதிகாரம் வழங்க நடவடிக்கை தேவை.. ஐகோர்ட் கருத்து
மதுரை: கூண்டுக்கிளியாக இருக்கும் சிபிஐ அமைப்பிற்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், சிபிஐ அமைப்பின் தன்னாட்சியை உறுதி செய்யும் விதமாக சில பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் சுமார் 300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சஞ்சீவ் குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.

கூண்டுக்கிளி
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மோசடி வழக்கைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரே தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிஐ அமைப்பு குறித்து சில முக்கிய கருத்துகளை முன் வைத்தனர். கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பிற்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்காக சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர்.

தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும்
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்படும்போது மட்டுமே சிபிஐ அமைப்பின் தன்னாட்சியை உறுதி செய்ய முடியும். சிபிஐ அமைப்பின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்தும் அதன் தன்னாட்சியை உறுதி செய்யும் வகையிலும் தனிச் சட்டத்தை இயற்ற மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அரசின் எந்தவொரு தலையீடும் இல்லாமல் தன்னாட்சி கொண்ட அமைப்பாக சிபிஐயை மத்திய அரசு மாற்ற வேண்டும்.

நவீன தொழில்நுட்பம்
சிபிஐ இயக்குநருக்கு அரசு செயலாளரின் அதிகாரங்கள் வழங்கப்படலாம். அதேபோல சிபிஐ நேரடியாக அமைச்சர் அல்லது பிரதமருக்குக் கீழ் செயல்படுவதைப் போல மாற்றியமைக்கலாம். சிபிஐ-க்கு தேவையான நிதியை ஓராண்டிற்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். அமெரிக்காவின் எஃப்பிஐ மற்றும் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு போலீசைப் போல நவீனத் தொழில்நுட்பங்கள் சிபிஐக்கு வழங்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்தனர்.

6 வாரங்களில் அறிக்கை
மேலும், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிஐ காலியிடங்களை நிரப்பவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிபிஐ
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ செயல்படுவதாகப் பல ஆண்டுகளாகவே விமர்சனம் இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ அமைப்பைக் கூண்டுக்கிளி என உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்தது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, சிபிஐ அமைப்பு அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்படுவதாக விமர்சித்திருந்தது. இப்போது கட்சிகள் மாறியிருந்தாலும், காட்சிககள் மாறவில்லை. இந்தச் சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications