"ஒலிம்பிக்தான் கனவு" நேபாளத்தில் கொடி நாட்டிய தமிழக மாணவி.. அசாத்தியங்களை சாதிக்க துடிக்கும் ராஜி!
மதுரை: நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச 800 மீட்டர் தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த வீராங்கனை ராஜி. 21 வயதில் பொறியியல் மாஸ்டர் டிகிரி படித்து வரும் இவர், விளையாட்டில் அடுத்தடுத்து படைத்து வரும் சாதனைகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தூங்கா நகரம், கோயில் நகரம், உணவின் தலைநகர் என்று பல்வேறு அடையாளங்களை கொண்டுள்ள மதுரையின் அடையாளம் அண்மைக் காலமாக மாறி வருகிறது. பழமையான வரலாற்று எச்சங்களுடன் உள்ள மதுரையில் விளையாட்டு வீரர்கள் முக்கிய அடையாளமாக மாறி வருகின்றனர். ஆம்.. கடந்த சில மாதங்களில் மதுரை மாவட்டத்தில் இருந்து சர்வதேச அளவில் விளையாட்டில் அசத்தி வரும் வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை ஒன்றல்ல, இரண்டல்ல, எண்ணிலடங்காதவை.
பளுதூக்கும் வீராங்கணை கேஷினி, தடகள வீராங்கனை ரேவதி, இந்திய மகளிர் கபடி அணிக்காக விளையாடும் குரு சுந்தரி, இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் சச்சின் சிவா ஆகியோர் அண்மைக் காலங்களில் சாதித்தவர்கள். இதுமட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியிலும் மதுரையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டி
நேபாளத்தில் கொடி நாட்டிய மதுரையின் மகள்
அந்த வகையில் நேபாள நாட்டில் நடைபெற்ற 800 மீட்டர் தடகள போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் மதுரை மாவட்டம் அச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜி வீரமணி. கைத்தறி தொழில் செய்து வரும் தந்தை வீரமணியின் ஒரே மகள் இவர். நடுத்தர வர்க்கத்திற்கே உரித்தான இன்ஜினியரிங் படிப்பு, அதற்கு மத்தியில் விளையாட்டு.. என்று நேரமின்றி இருந்தவரை தொலைபேசியில் பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது.
தொடர்ந்து பயிற்சி
பிரத்யேக பயிற்சியாளர்கள் இல்லாமல் கல்லூரி பயிற்சியாளரான செந்தில் குமாரிடம் தான் தடகள பயிற்சியை எடுத்து வருகிறார் ராஜி. 800 மீ தடகளம் என்பது அவ்வளவு எளிதான விளையாட்டு அல்ல. 100 மீ ஓட்டப்பந்தயத்திற்கு கொடுக்கும் உச்சபட்ச உழைப்பை இன்னும் 100 மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பயிற்சியின் போது எவ்வளவு வேகமாக ஓடி வந்தாலும், இந்த வேகம் போதாது என்று பயிற்சியாளர் கூறிவிட்டால், நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்துவிட்டு, அடுத்த நிமிஷமே ஓட்டத்திற்கு தயாராகிவிடுவார் ராஜி.
தோல்வியில் இருந்து கற்ற பாடம்
"இந்த விளையாட்டுப் பயணம் எங்கிருந்து தொடங்கியது.." என்ற கேட்டபோது, "சிறுவயதில் தொடங்கினேன். ஆனால் தடகளம் என்ற அல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்று பதக்கம் பெறுவேன். 6ம் வகுப்புக்கு பின்னர் தான் தடகளத்தில் திறமை இருப்பதை அறிந்தேன். அதற்காக பயிற்சி எடுத்தபோது, திறமை வளர்கிறதா, வேகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை. 8ம் வகுப்பின் போது, மண்டல அளவிலான Zonals போட்டியில் தோல்வியடைந்த போதுதான் அதிகமாக உழைத்தேன்.." என்று தோல்வியில் இருந்து பாடம் கற்றதை விளக்குகினார் ராஜி.
மைதானத்தில் 5 மணி நேரம்
பள்ளிக் காலத்தில் தொடங்கிய பயணம் ஒவ்வொரு நாளும் காலை 5 மணி முதல் 7.30 மணி, மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பயிற்சிதான். அதே சாதாரண நாட்கள் என்றால், மைதானத்தில் நடைபெறும் பயிற்சியின் நேரம் இன்னும் நீட்டிக்கப்படும். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் மைதானத்தில் இருக்கும் நேரம் தான் மிகமுக்கியமானவை. தொடர்ந்து ராஜி பயிற்சியில் ஈடுபட்டதன் விளைவு தான் Zonalsல் இருந்து Division, Divisionல் இருந்து மாவட்டம், மாவட்ட அளவில் இருந்து மாநிலம் என்று முன்னேறியுள்ளார்.
மாநில அளவிலான போட்டி
ஆனால் ஒவ்வொரு போட்டியும், களமும் மாறும் போதும் ராஜியின் உழைப்பு இரட்டிப்பாகி கொண்டே சென்றுள்ளது. இதன் காரணமாகவே தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான 800 மீ தடகள போட்டியில் 3 நிமிடங்கள் 28 வினாடிகளில் முடித்து இரண்டாவதாக வெற்றி பெற்றுள்ளார். முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்ற அறிவிப்பு வரவே, இரண்டாம் இடம் பிடித்த சோகம் ராஜியின் முகத்தில் மறைந்துபோயுள்ளது.
வாய்ப்பை பயன்படுத்திய ராஜி
அந்த வாய்ப்பு ராஜிக்கு மாபெரும் சாதனை படைப்பதற்கான களத்தையும் கொடுத்துள்ளது. நொய்டாவில் நடைபெற்ற தேசிய அளவிலான 800 மீ தடகள போட்டியில் 2 நிமிடங்கள் 28 வினாடிகளில் போட்டியின் எல்லையை எட்டி அசத்தியுள்ளார். மாநில அளவிலான போட்டியில் இதே தூரத்தை 3.28 நிமிடங்களில் முடித்த அதே ராஜி, அடுத்த சில மாதங்களில் 800 மீ தூரத்தை 2.28 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சாதாரண வீரர், சரித்திரம் படைக்கும் வீரராகவும், வீராங்கணையாகவும் மாறுவதற்கு ஒரு ஆட்டம் போதும். ஆனால் அதனை தக்கவைக்க தொடர்ந்து வெற்றிகள் வேண்டும்.
நொய்டாவில் அசத்தல்
நொய்டாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து அசத்திய ராஜிக்கு, அடுத்ததாக நேபாளத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை பந்தயம் நம் நாட்டு வீராங்கனைகளோடு அல்ல, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வீராங்கனைகளோடு. ஆனால் எதற்கும் ராஜி அசரவில்லை. நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் 800 மீ தடகள போட்டியில் 2.15 நிமிடங்களில் கடந்து வெற்றிவாகை சூடியுள்ளார்.
உதவினால் நல்லது
பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ராஜிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதே கனவு. ஆனால் சர்வதேச தரத்திலான போட்டிகளில் பங்கேற்க சர்வதேச தரத்திலான பயிற்சியும் அவசியம். விளையாட்டில் அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறுவதற்கு பொருளாதார ரீதியாக ராஜியின் தந்தை வீரமணியும் (தொலைபேசி எண்- 9865388361), அவரது குடும்பமும் முடிந்த அளவிற்கு உதவி செய்து வருகிறார்கள். ஆனால் அது போனமானதாக இல்லை. சக தமிழர்களின் உதவி இருந்தால் சாதனையில் அடுத்த உச்சத்தை நமது சகோதரி பெறுவார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஏழ்மையான குடும்பம்
சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் என்பதால் வீடு முழுக்க பதக்கங்களும், கோப்பைகளும் தான். சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ராஜி தான், இன்று நேபாளத்தில் மதுரை மண்ணிற்கு பெருமையை தேடி கொடுத்துள்ளார். உள்ளூர் மைதானங்களில் இறங்கி பார்த்தால் தான் எத்தனை டெண்டுல்கர், தோனி வீணாய் வழிகாட்டுதல் இல்லாமல் கிணற்றுத்தவளையாய் வைத்திருக்கிறோம் என்பது தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிராமத்தில் இருந்து வெளி வரும் வீரர், வீராங்கனைகள் எந்த அச்சமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அசாத்தியங்களை படைத்து வருகின்றனர். சிறுவயதிலிருந்தே விளையாட்டில் புலியாக இருக்கும் ராஜி, மேலும் பல சாதனைகள் படைத்து தமிழக மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள்!