மதுரை ஜவுளிக்கடை தீ விபத்து... தீயணைப்புத்துறை டி.ஜி.பி.ஜாபர்சேட் நேரில் ஆய்வு..!
மதுரை: மதுரை ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் நிகழ்விடத்தை நேரில் ஆய்வு செய்தார் தீயணைப்புத்துறை டி.ஜி.பி.ஜாபர்சேட்.
மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்ததுடன் தீயும் வேகமாக பரவத் தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீயின் வீரியம் அதிகரித்து அருகாமை கட்டிடங்களுக்கும் பரவத் தொடங்கியது. தீ விபத்து நிகழ்ந்த ஜவுளிக்கடை பழைய கட்டிடத்தில் இயங்கியதால் எதிர்பாராத விதமாக அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் தீயணைப்புப் படை வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீபாவாளி பண்டிகை அன்று மதுரையில் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டது மதுரை மக்களை கவலை கொள்ளச் செய்தது. இதனிடையே தீபத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமி, சிவராஜன் ஆகிய இருவரில் சிவராஜன் என்பவர் சிறந்த வீரர் என்ற பட்டத்தை மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் பெற்றிருந்தார்.
பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததே உயிரிழப்பிற்கு காரணமாக கருதப்படுகிறது. மேலும், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது பற்றியும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்த இரண்டு வீரர்கள் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
குழந்தைகளுக்காக நாட்டின் முதல் பிரத்யேக காவல் நிலையம்... திருச்சியில் திறப்பு...!
இந்த தொகை போதாது எனக் கூறியுள்ள ஸ்டாலின், உயிரிழந்த இரண்டு பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார். தீ விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிடுவதற்காக மதுரை விரைந்த தீயணைப்புத்துறை டிஜிபி ஜாபர் சேட் நிகழ்விடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேட்டியளித்த அவர், குறுகிய சந்துக்குள் கடை இருந்ததால் தீயணைப்பு வாகனத்தை அங்கு உடனடியாக கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்ததாக தெரிவித்தார். இருப்பினும் ஜேசிபி வாகனம் மூலம் பாதை ஏற்படுத்தப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்கள் இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஜாபர்சேட் ஆறுதல் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.