10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து! ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மதுரை திருவிழா.. இன்னைக்கு ஒரு புடி!
மதுரை: திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத அசைவ திருவிழா நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து சமைக்கப்பட்டது. இவர் சாப்பிடும் எச்சை இலைகள் காய்ந்து போகும் வரை அந்த கோயிலுக்கு பெண்கள் வரவேக் கூடாது என்ற நடைமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமம் உள்ளது. இங்கு காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.
இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

மேய்ச்சல்
வளரும் இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது அந்த ஆடுகளை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா இன்று காலை நடந்தது.

பொங்கல் வைத்து வழிபாடு
காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர். பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 60 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 50 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. கரும்பாறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாததால் அங்கு சமைக்கப்பட்ட அன்னத்தை மலை போல் குவித்து., பிறகு கறி குழம்பு எடுத்து வந்து அன்னத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அண்டாக்களில் தயார்
அதனைத் தொடர்ந்து., அண்டாக்களில் தயாராக இருந்த கறி குழம்பு கறிகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்து கறியில் உள்ள எலும்புகளை தனியே பிரித்து எடுத்து விடுவார்கள். அதன் பின்னரே கறிகளை எடுத்து அனைவருக்கும் பரிமாறுவார்கள். முதலில் இலையில் கறியை வைத்துவிட்டு அதன் பின் சாதம் அதன் பின்னரே கறி குழம்பு ஊற்றி அன்னதானம் நடைபெறும்.

10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்களுக்கு பிரசாதம்
இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுக் கறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பரிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அங்கிருந்து மறைந்த பிறகே பெண்கள் கோயிலுக்கு தரிசனத்திற்கு வருவர்.

கறி விருந்து
இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு அன்னதான விழாவிற்காக பக்தர்கள் இப்போதே நேர்த்திக் கடனாக ஆடுகளை வழங்கினர். நேர்த்தி கடனாக வழங்கப்படும் ஆடுகள் கருப்பு ஆடுகளாக மட்டுமே வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத திருவிழா
பல இடங்களில் ஆண்களுக்கு மட்டும் வினோத திருவிழா நடைபெறும். அந்த வகையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பண்ணசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே திரண்டு வந்து சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வழிபட்ட வினோத திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. அது போல் மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்கள் மட்டுமே நடத்தும் திருவிழாவில் 70 க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு மண்பானையில் வேப்பிலை வைத்து சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடரி அம்மன் கன்னிபெண் குலதெய்வதை ஆண்கள் மட்டுமே கூடி வழிபாடு செய்வது வழக்கம். இப்படி நிறைய இடங்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாக்கள் பிரபலம்!












Click it and Unblock the Notifications