மதுரையில் ஜே பி நட்டாவை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் - காரணம் என்ன தெரியுமா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை மதுரையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசியுள்ளார். முதல்வரும், துணை முதல்வரும் மதுரை வந்த நிலையிலும் அமைச்சர் தனியாக சந்தித்து பேசியது பேசு பொருளாகியுள்ளது.
மதுரை: தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். முதல்வரும், துணை முதல்வரும் மதுரைக்கு வந்த நிலையில் பாஜக தேசிய தலைவரை அமைச்சர் தனியாக சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆளுங்கட்சி, எதிர்கட்சி தலைவர்கள் மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு கை பார்க்கலாம் என்று தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தை 5 மாவட்டங்களில் முடித்து விட்டார். இப்போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மதுரையிலும் புதுச்சேரியிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.
லோக்சபா தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி நீடிப்பதாக முதல்வரும் துணை முதல்வரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கூறி விட்டனர். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி இதுவரை இன்னமும் பேசி முடிவு செய்யவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் மதுரை வந்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்றிரவு மதுரை வந்தார். இன்று, காலை மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருமங்கலத்தை அடுத்த குண்ணத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி. ஆரின் நினைவாக கட்டப்பட்டுள்ள கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை மதுரை வந்தனர். இந்த விழாவில், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சந்திக்காமல் நேராக விழா நடைபெறும் இடத்திற்கு வந்து பேசி விட்டு உடனே சென்னை திரும்பி விட்டனர். அதே நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக ஜே.பி.நட்டா இருந்ததால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.
மதுரைக்கு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள ஜே பி நட்டா முன்னாள் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் என்பதாலும், நான் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் என்பதாலும், குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வழங்கும் போது ஜே பி நட்டா மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் என்பதன் அடிப்படையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறினார். இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி நட்டா நாளைய தினம், புதுச்சேரியில் பாரதியார் சிலைக்கு மரியாதை செய்ய இருக்கிறார். எனவே, ஜே. பி நட்டா இந்த முறை அதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திக்காமல் டெல்லிக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications