சீவி சிங்காரிச்சு... சீரியலை கூட விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க... ஸ்டாலின் கலகல
Recommended Video

மதுரை: மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தின்போது வழக்கமாக உட்காராமல் நடந்து சென்று பேசியதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கவனத்தை கூடுதலாக ஈர்த்தார்.
தனக்கன்குளத்தில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். இரு புறமும் மக்கள் கூட்டம் திரண்டு உட்கார்ந்திருக்க, அதன் நடுவில் மைக்கை பிடித்துகொண்டு நடந்து சென்றே பேசி கொண்டிருந்தார் ஸ்டாலின்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த திண்ணை போன்ற மேடையில் உட்காராமல் இரு புறமும் உட்கார்ந்திருந்த மக்களை நோக்கி ஷூவலாக நடந்து சென்றவாறே பேசுவதை கண்டு அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அப்போது ஸ்டாலின் சொன்னதாவது:

சீவி சிங்காரிச்சு...
எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு, வந்திருக்கிறீர்கள். சீவி சிங்காரிச்சு... ஒரு புன்முறுவலோடு வீட்டில் இருக்கிற சீரியலை கூட விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க. இதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு. உங்களுக்கெல்லாம் என் நன்றி. இந்த தனக்கன்குளம் ஊராட்சிக்கு நான் கோயிலுக்கு பக்தன் வருவதை போல பரவசத்துடன் வந்திருக்கிறேன்.

உள்ளாட்சி தேர்தல்
அரசியல்முறை என்பது ஒரு ஜனநாயக தேர்தல். ஜனம் என்றால் மக்கள். மக்களால் உருவாக்கப்படக்கூடியது. ஊராட்சி சபை அரசியல் அதிகாரத்திற்கு உட்படக்கூடியது. உள்ளாட்சி தேர்தல் என்னைக்கோ நடத்தி இருந்தால், கிராம சபை கூட்டத்தை திமுக நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ரொம்ப நல்லவர்
இன்றைய மாநிலத்தில், மத்தியில் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும். பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரைவிட ரொம்ப நல்லவர் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமிதான்.

சிரிக்க ஆரம்பிச்சிட்டீங்க
பாத்தீங்களா.. எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டீங்க. காரணம் உங்களுக்கே அவங்களை பத்தி நல்லா தெரியுது. அந்த அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியை நடத்தி வருகிறார்கள். நல்லவங்கன்னு சொன்னதுக்கே உங்களுக்கு சிரிப்பு வருதுன்னா... எந்த அளவுக்கு இவங்க ஆட்சி மோசம்னு பாருங்க.

2 பேரும் கில்லாடிகள்
நான் ஆட்சிக்கு வந்தா வானத்தை கிழிப்பேன், வைகுண்டத்தை காட்டுவேன்னு, மணலை கூட கயிறா திரிப்பேன் பொய்யை சொல்லியே மோடி ஆட்சிக்கு வந்தார். அதேபோல, இங்க சசிகலாவை ஏமாத்திட்டு, ஜெயிலுக்கும் அனுப்பிட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்திருக்கார். ஆக, ஏமாத்திறதில், பொய் சொல்றதில் இரண்டு பேருமே கில்லாடிகளாக இருக்கிறார்கள்.

ஓடவிட்ட மத்திய அரசு
இப்போ மோடி பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த போறேன்னு மோடி திரும்பவும் ஒரு பொய் சொல்லி இருக்கிறார். விவசாயிகளின் கோமணத்தையே அவிழ்த்து விட்டுட்டு டெல்லியில் ஓடவிட்டது மத்திய அரசு.

பழி வாங்குகிறார்
இப்போது விவசாயிகள் நலன் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. மம்தா பானர்ஜிக்கு எந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. மம்தா பானர்ஜியை பழிவாங்குவதற்காக பல்வேறு அக்கிரமங்களை மோடி அரசு செய்து வருகிறது. இரும்பு பெண்மணியை பிரதமர் மோடி பழி வாங்குகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications