ராம ஸ்ரீனிவாசனை கடைசி நேரத்தில் கைவிட்ட நயினார்.. பிரச்சாரத்திற்கு வராமல் எஸ்கேப்பான பாஜக தலைமை!
மதுரை: மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் திட்டத்தை கடைசி நேரத்தில் நயினார் நாகேந்திரன் கைவிட்டது தெரிய வந்துள்ளது. பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதால், கடைசி நேரத்தில் நயினார் நாகேந்திரன் மதுரைக்கு வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு மதுரையில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மதுரை தெற்கு தொகுதி வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் அறிவிக்கப்பட்டார்.

இவரின் வேட்புமனு தாக்கலின் போது மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது ராம ஸ்ரீனிவாசன் மதுரையில் வென்றால், மெட்ரோ ரயில் திட்டத்தை பாஜக கொண்டு வரும் என்று பேசியது சர்ச்சையாகியது. இதன்பின் ராம ஸ்ரீனிவாசன் பல்வேறு அமைப்புகளின் ஆதரவை பெறுவதிலேயே தீவிரமாக இருக்கிறார்.
அதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மட்டுமே ராம ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். மற்றபடி பாஜக தலைமையில் இருந்து ராம ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக யாருமே இதுவரை பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. நேற்று காலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ராம ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது.
மதுரை தெற்கு தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் கணிசமாக இருப்பதால், நயினார் நாகேந்திரனின் பிரச்சாரம் எடுபடும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடத்தப்பட்டதால், அதனை காரணமாக வைத்து நயினார் நாகேந்திரன் கடைசி நேரத்தில் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
அதேபோல் ராம ஸ்ரீனிவாசன் தரப்பில் டிஜிட்டல் மற்றும் வாகன பிரச்சாரத்திலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக அமைப்புகள், சங்கங்களின் ஆதரவை கோருவதில் ராம ஸ்ரீனிவாசன் காட்டும் ஆர்வம், சாமானிய மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்ற விமர்சனமும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே செளராஷ்டிரா வாக்குகள் மற்றும் அதிருப்தி வாக்குகளை தவெக மற்றும் நாதக அதிகமாக பிரிக்கிறது.
இப்படியான நேரத்தில் அந்த தொகுதிக்குள் நேரடியாக நடந்து சென்று ஒவ்வொரு வாக்காளரிடமும் வாக்கு சேகரிப்பது அவசியம். மதுரை தெற்கு தொகுதி அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளில் ஒன்று. அதற்கேற்ப அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகளிடமும் ராம ஸ்ரீனிவாசன் அனுசரித்து செல்லவில்லை. இதனால் ராம ஸ்ரீனிவாசன் மீது நாளுக்கு நாள் அதிருப்தி அதிகமாகி கொண்டே செல்வதாகவும் அதிமுகவினர் புலம்ப தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications