அழகர் ஆற்றில் இறங்கிய போது ஆம்புலன்ஸ் வந்ததா? மக்கள் வழிவிட்டனரா?.. தீயாய் பரவும் பழைய வீடியோ
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் 10 லட்சம் பேர் திரண்டிருந்த நிலையில் அந்த பெரும் கூட்டத்திலும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மக்கள் வழிவிட்ட காட்சி என ஒரு வீடியோ தீயாய் பரவி வரும் நிலையில் அது பழைய வீடியோ என்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.
Recommended Video
மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள் மதுரைக்கு வருவர்.
இந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த இரு ஆண்டுகளாக இந்த மதுரை சித்திரை திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது தடை செய்யப்பட்டிருந்தது.

சித்திரை திருவிழா
இந்த சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்டவை நடைபெறும். இந்த முறை கொரோனா நெறிமுறைகளை தமிழக அரசு திரும்ப பெற்றது. அதாவது தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மக்கள் தேவைப்பட்டால் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுதலை செய்யலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா
இதையடுத்து இந்த முறை மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள் மதுரைக்கு செல்ல தொடங்கினர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையடுத்து அழகர் ஆற்றில் இறங்குவதற்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

10 லட்சம் பேர்
நேற்றைய தினம் அதிகாலை அழகர் ஆற்றில் இறங்குவதற்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அந்த வைபவத்தை காண 10 லட்சம் பேர் திரண்டிருந்தனர். பொதுவாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கூடுவதுண்டு. ஆனால் இந்த முறை இரு ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வு நடைபெறுவதால் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

ஆம்புலன்ஸ் வாகனம்
அப்போது ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. இதையடுத்து அந்த வாகனத்திற்கு வழியை ஏற்படுத்தும் பணிகளை கோயில் நிர்வாகத்தினரும் அறங்காவலர் குழும் செய்தனர். அப்போது ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் அளவுக்கு மக்களை பின்னோக்கி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.

தங்க குதிரை
மக்களை போல் தங்க குதிரையில் பவனி வந்த கள்ளழகரும் பின்னோக்கி செல்லப்பட்டு ஓரங்கமாக நிற்க வைக்கப்பட்டார். அந்த ஆம்புன்ஸ் வாகனம் சென்றதும் அழகர் தனது குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். சுமார் 10 லட்சம் பேர் திரண்டிருந்த நிகழ்விலும் ஒரு ஆம்புலன்ஸுக்காக அழகரையே ஓரமாக நிறுத்திவிட்டு வழி விட்டது போன்ற வீடியோ சுற்றி வருகிறது. இது இந்த ஆண்டு எடுக்கப்பட்டது இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சித்திரை திருவிழாவின் போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடப்பட்ட பழைய வீடியோதான் தற்போது புதிது என பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications