மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை.. பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம்
மதுரை: மதுரையில் உள்ள பழமை வாய்ந்த கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோயில். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமாக இக்கோயில் விளங்கி வருகிறது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் சிறப்பு வாய்ந்த விழாவான ஐந்து கருடசேவை நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்வேறு கோயில்களில் ஒரே நாளில் ஐந்துக்கும் அதிகமான கருட சேவைகள் நடத்தப்பட்டாலும், புரட்டாசி பெளர்ணமி தினத்தன்று மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் ஐந்து கருட சேவை நிகழ்த்தப்படுவது தனிச் சிறப்பாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு புரட்டாசி பெளர்ணமி தினமான நேற்று நடைபெற்ற ஐந்து கருட சேவையில், கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக் கருட வாகனத்தில் வியூக சுந்தரராசப் பெருமாளும், மற்றொரு கருட வாகனத்தில் கூடலழகரும் எழுந்தருளினர். இதேபோல, மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து வீரராகவப் பெருமாள் எழுந்தருளினார்.

வடக்குமாசி வீதியில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ள உற்சவரான ரெங்கநாதரும், மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பில் உள்ள மதனகோபாலசாமி கோயிலில் இருந்து மதனகோபால சுவாமியும் கருட வாகனத்தில் கூடலழகர் கோயில் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

ஒரே நேரத்தில் ஐந்து கருட சேவையில் எழுந்தருளிய பெருமாளுக்கு மஹா தீபராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஐந்து கருட வாகனங்களில் பெருமாள் மாசி வீதிகளில் வீதி உலா வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை பக்திப் பரவசோடு சுவாமி தரிசனம் செய்தனர்.













Click it and Unblock the Notifications