வைகை ஆற்றில் மூழ்கிய கார்... உயிருக்கு போராடிய 5 பேரை காப்பாற்றிய டிரைவர் - குவியும் பாராட்டு
வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி காரில் உயிருக்குப் போராடிய ஐந்து பேரையும் துணிச்சலுடன் போராடி மீட்டுள்ளார் டிரைவர். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மதுரை: வைகை ஆற்றில் பெருகி வந்த வெள்ளத்தில் சிக்கி ஒரு குடும்பமே உயிருக்குப்போராடிக் கொண்டிருக்க, துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமாக கருதி ஆற்றில் குதித்து 5 உயிர்களை காப்பாற்றி இருக்கிறார் ஒரு இளைஞர். தனி ஒருவனாக ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றிய முத்து என்ற அந்த இளைஞரை தற்போது தமிழகமே கொண்டாடி வருகிறது. தமிழ்நாட்டின் சொத்தாக மாறி விட்டார் முத்து.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதுமே ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. மாரநாடு கண்மாய்க்கு மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையை ஒட்டி கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயில் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
நேற்று மாலை 5 மணிக்கு மானாமதுரை பகுதியில் வசிக்கும் கணவர், மனைவி, 2 குழந்தைகள், ஒரு முதியவர் என 5 பேர் காரில் மதுரையில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

உயிருக்கு போராடிய 5 பேர்
அப்போது திருப்புவனம் அடுத்த லாடனேந்தல் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாரநாடு கால்வாய்க்குள் விழுந்தது. 6 அடி ஆழம் இருந்த அந்த கால்வாயில், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. காருக்குள் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

உயிரை மீட்ட இளைஞர்
அப்போது அதே வழியாக திருப்புவனம், வடகரையைச் சேர்ந்த தனியார் நிறுவன டிரைவர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் காரில் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது கால்வாயில் கார் கவிழ்ந்து கிடந்ததை பார்த்து, உடனடியாக தனது காரை நிறுத்திவிட்டு இறங்கினார். காருக்குள் 5 பேர் சிக்கி இருப்பதைப் பார்த்து உடனடியாக கால்வாயில் குதித்தார்.

உயிருடன் மீட்பு
தண்ணீரில் நீந்தி சென்று காருக்குள் தவித்துக் கொண்டிருந்த 5 பேரையும் ஒவ்வொருவராக காப்பாற்றினார்.
தனது செயல் குறித்து கருத்து கூறியுள்ள முத்து, தண்ணீருக்குள் குதித்த உடன் குழந்தைகளை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என்றுதான் காருக்குள் இருந்தவர்கள் சொன்னார்கள். அனைவரையும் நான் மீட்டு விட்டேன் என்று தெரிவித்தார்.

இளைஞருக்கு பாராட்டு
முத்துக்கிருஷ்ணனின் இந்தச் செயலை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து முத்துக்கிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அரசியல் தலைவர்களும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் முத்துக்கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications