பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு.. ‘அமைச்சர் சொன்ன வார்த்தை’ கொதித்த பாஜக- பிரச்னைக்கு காரணம் என்ன?
மதுரை : மதுரை விமான நிலையத்தில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்னதைக் கேட்டு, அங்கிருந்த பாஜகவினர் கொதித்துப் போயிருந்த நிலையில் தான், அமைச்சரின் வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததால், அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர். பாஜகவினரின் கூட்டத்தைப் பார்த்த அமைச்சர் பிடிஆர், இவர்களுக்கு இங்கே என்ன வேலை எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அஞ்சலி செலுத்துவது என்றால் பொதுமக்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திக் கொள்ளட்டும் என அமைச்சர் பிடிஆர் கூறியதாக கூறப்படுகிறது.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று காலை தனி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அமைச்சர் பிடிஆர் அஞ்சலி
மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதி அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அண்ணாமலை அஞ்சலி
அதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அண்ணாமலை அஞ்சலி செலுத்த வருவதால், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பாஜக தொண்டர்கள் மதுரை விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.

அமைச்சர் காரில் தாக்குதல்
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்டது. மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்தச் சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?
பாஜக - திமுக நிர்வாகிகள் இடையே பல மாதங்களாக வார்த்தை மோதல்கள் நீடித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவதால், பாஜகவினர் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு அங்கு சென்று அஞ்சலி செலுத்திக் கோள்ள வேண்டும், இங்கு யாரும் இருக்கக்கூடாது என்று பாஜகவினரின் காதில் படும்படி அமைச்சர் பிடிஆர் கூறியதன் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் சொன்னது
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விமான நிலையத்திற்கு வந்தபோது, பாஜகவினர் திரண்டிருந்ததைப் பார்த்து, இவர்களுக்கு இங்கே என்ன வேலை? இங்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கட்சி சார்பில் பாஜகவினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்க முடியாது, அப்படி அஞ்சலி செலுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திக் கொள்ளட்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்
இது அங்கிருந்த பாஜகவினர் காதில் விழுந்துள்ளது. இதனால், பாஜகவினர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைச்சருக்கு எதிராகவும் சிலர் கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் டென்ஷனான அமைச்சர் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது, எந்த கட்சிக்காரர்களும் இங்கு இருக்கக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து போலீசார் அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்களை கிளம்புமாறு கூறியுள்ளனர்.

செருப்பு வீச்சு
இதனால் கோபத்தில் இருந்த பாஜகவினர், அமைச்சர் பிடிஆர் அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்தபோது, தாங்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் காரில் ஏறிக் கிளம்பியதும் அவரது காரின் மீது ஒருவர் செருப்பை வீசியுள்ளார். அங்கிருந்த போலீசார் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி, அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications