மனைவிக்கு பாலுறவு படம் பார்க்க, சுய இன்பம் அனுபவிக்க உரிமை உண்டு! விவாகரத்து கோர முடியாது- ஹைகோர்ட்
மதுரை: திருமணமான பின்னரும் பெண்ணுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருக்கின்றன; திருமணமான பின்னர் மனைவியாகும் பெண்ணுக்கு, சட்டம் தடை செய்யாத பாலுறவு சார்ந்த படங்களை பார்க்கவும் சுய இன்பம் அனுபவிக்கவும் உரிமை உண்டு; இதனை அடிப்படையாக வைத்து கணவர் விவாகரத்து கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
மனைவி தமது சுய இன்பத்துக்காக பாலுறவு சார் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமாகாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் மனைவி பாலுறவு சார் படங்களைப் பார்ப்பதாலேயே விவாகரத்து கோரி கணவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை டிஸ்மிஸ் செய்தது.

கரூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
விவாகரத்துக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில், மனைவி ஆபாச படம் பார்ப்பதை குற்றமாக சுட்டிக்காட்டி கணவர் விவாகரத்து கோரிய மனுவை கரூர் குடும்ப நல நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கணவர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
விவாகரத்துக்கு கணவர் சொன்ன காரணங்கள்
இம்மனுவை நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் ஆர். பூர்ணிமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், இருவரது முதல் திருமணத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவித்தது. இருவருமே தங்களது வாழ்க்கையின் 2-வது இன்னிங்ஸை தொடங்கி இருக்கின்றனர். இப்போது மனைவிக்கு பரவக் கூடிய பாலுறவு சார் நோய் இருப்பதாகவும் அவரது நடத்தைகள் குரூரமாக இருப்பதாகவும் கூறி 2-வது திருமணத்தையும் செல்லாது என அறிவிக்க கோருகிறார் கணவர்.
மனைவிக்கு பாலுறவு நோய்கள் இருக்கிறது
மனைவிக்கு பாலுறவு சார் நோய்கள் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் அவசியமாகும். அதேநேரத்தில் தமக்கு அப்படியான எந்த பாதிப்பும் இல்லை; தமது உடல்நிலை சீராகவே இருக்கிறது என்பதை மனைவியின் தரப்பில் நிரூபிக்க அவகாசம் தரப்பட வேண்டும். ஆனால் மனைவிக்கு பாலுறவு நோய்கள் இருப்பதாக கூறும் கணவர் தரப்பில் அப்படி போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.
சுய இன்பமும் பாலுறவு சார் படங்களும்
மனைவி மீது கணவர் வைக்கும் மற்றொரு குற்றச்சாடு, சுய இன்பத்துக்காக பாலுறவு சார் படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்; அந்த காட்சிகள் அடிப்படையில் தம்மை கொடூரமாக நடத்துகிறார் என்பதாகும். தடை செய்யபடாத பாலுறவு சார் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை. அப்படி பாலுறவு சார் படங்களை மனைவி பார்ப்பது அவரது மனதிடத்தைப் பாதிக்கக் கூடும். அதற்காக மனைவி கொடூரமாக அல்லது குரூரமாக நடந்து கொள்கிறார் என்பதாகாது.
பெண்ணின் சுய இன்பம் அவரது உரிமை
அடுத்ததாக மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவதான குற்றச்சாட்டு. ஒரு பெண்ணை சுய இன்பத்தில் ஈடுபடுவது தொடர்பாக கேள்வி எழுப்பி பதிலளிக்க சொல்வது என்பது அவரது பாலுறவு சுதந்திரத்தை மீறுவதாகும். அத்துடன் விவாகரத்துகளுக்கு சுய இன்பத்தை ஒரு காரணமாகவும் குறிப்பிட முடியாது.
மனைவியானாலும் தனிப்பட்ட உரிமை உண்டு
ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. அது மனைவிக்கும் உரியதுதான். ஒரு பெண் தமது பாலுறவு சுதந்திரத்துக்காக தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கவும் முடியாது. இத்தகைய நடவடிக்கை, சட்டத்துக்கு எதிரானதாக இல்லாத நிலையில் அந்த சுதந்திரத்தை அந்த பெண்ணுக்கு மறுக்கவும் முடியாது. ஒரு பெண் திருமணத்துக்குப் பின்னர் மனைவியாகிறார்.. ஆனாலும் அவருக்கு தனிப்பட்ட உரிமைகள் இருக்கவே செய்கின்றன. ஒரு பெண்ணாக அவருக்கான அனைத்து தனிப்பட்ட உரிமைகளும் தொடருகின்றன.
கணவர் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்
மேலும் மனைவியின் செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் மனுதாரரர் (கணவர்) கோரிக்கை வைக்கவில்லை. அந்த பெண்ணை குறுக்கு விசாரணை செய்கிற போது கூட இந்த யோசனையை கணவர் முன்வைக்கவும் இல்லை. கணவர் முன்வைக்கிற அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த பெண் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னுடைய மனைவி வீட்டு பணிகளை செய்யவில்லை என்பதற்காக எந்த ஆதாரத்தையும் கணவர் தரப்பில் தாக்கல் செய்யவும் இல்லை. ஆகையால் கீழ் நீதிமன்றம், விவாகரத்து தர மறுத்த உத்தரவை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. விவாகரத்து கோரிய கணவரின் மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications