"155 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மேம்பாலம்".. 27 மணி நேரத்தில் மொத்த இடமும் மாறிப்போச்சு!
மும்பை: ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்ட கர்னக் மேம்பாலத்தை அகற்றும் பணி 27 மணி நேரம் நடைபெற்றது. பாலத்தை உடைக்கும் பணிக்காக 4 கிரேன்களும் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கர்னக் மேம்பாலம் உள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்- மஸ்ஜித் பண்டர் புறநகர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினால் ஆன கர்னக் மேம்பாலம் உள்ளது.

பாலத்தை இடிக்க திட்டம்
19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டே பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் பாம்பே கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பற்றது என்று சான்றளித்தது. இதையடுத்து, இந்த மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. வெறும் காட்சிப் பொருளாக இருந்த மேம்பாலத்தை இடிக்க மத்திய ரயில்வே திட்டமிட்டது.

500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. 450 டன் எடை கொண்ட இந்த இரும்பு பாலத்தை அகற்ற 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிரேன்களும் பயன்படுத்தப்பட்டன. நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த பணி 21 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது.

வீடியோ வெளியீடு
பாலம் அகற்றப்பட்டது தொடர்பான வீடியோக்களை மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி எம் சுதார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். பெரிய கிரேன்கள் இரும்பு பாலங்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தன. ஊழியர்கள் மிகவும் சவாலான வகையில் இதற்கான பணியில் ஈடுபட்டு மேம்பாலத்தை அகற்றினர்.

மிகவும் சவால் மிக்க பணி
இது மிகவும் சவால் மிக்க பணியாக இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணியின் காரணமாக பைகுல்லா மற்றும் துறைமுக வழித்தடம் வடலாவில் இருந்து சி.எஸ்.எம்.டி. இடையே ரயில் போக்குவரத்து 27 மணி நேரம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பணிகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மும்பையில் எப்போதும் பரபரப்புடன் இருக்கும் சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையம் வெறிச்சோடி இருந்தது.

கடின உழைப்புக்கு பாராட்டு
ரயில்வே மேம்பாலத்தை அகற்றும் பணிகள் தொடர்பான பதிவுகளும் இணையத்தை ஆக்கிரமித்து இருந்தன. நெட்டிசன்கள் பலரும் ரயில்வே சிறப்பான பணிகளை செய்து இருப்பதாக பாராட்டி பதிவிட்டு இருந்ததை காண முடிந்தது. சில நெட்டிசன்கள், பாலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டி பதிவிட்டு இருந்தனர். சில நெட்டிசன்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊரடங்கு அமலில் இருந்த போது இதை செய்து இருந்தால் பயணிகளின் சிரமத்தை தவிர்த்து இருக்க முடியும் என்று பதிவிட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications