உத்தவ் தாக்கரேவுக்கு மீண்டும் அடி... தானே கவுன்சிலர்கள் 66 பேர் கூண்டோடு ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு!
மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து சிவசேனா கட்சி, சின்னத்தை பறிப்பதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே படுதீவிரமாக இருக்கிறார். தற்போது தானே மாநகராட்சியின் 66 கவுன்சிலர்கள் கூண்டோடு ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா அரசியில் கொடிகட்டிப் பறந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் துணையோடு கோட்டையையும் பிடித்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக, அவரது மகன் ஆதித்யா தாக்கரே அமைச்சராக கோலோச்சினர்.
ஆனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஒன்று திரண்டதால் உத்தவ் தாக்கரேவின் பதவியும் ஆட்சியும் பறிபோனது. இப்போது உத்தவ் தாக்கரே பிடியில் இருந்து சிவசேனாவும் பறிபோகும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை தம் வசமாக்கிக் கொண்டார் ஏக்நாத் ஷிண்டே. இதையடுத்து 18 எம்.பி.க்களில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கின்றனர். இதனாலேயே லோக்சபா சிவசேனா கொறடாவையும் மாற்றியது உத்தவ் தாக்கரே தரப்பு.
தற்போது மாநகராட்சி கவுன்சிலர்களை வளைத்து வருகிறது ஏக்நாத் ஷிண்டே அணி. ஏக்நாத் ஷிண்டேவின் கோட்டையான தானே மாநகராட்சி இப்போது அவரது வசமாகிவிட்டது. தானே மாநகராட்சியின் 66 கவுன்சிலர்கள் அப்படியே ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கின்றனர். இது உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
12 சிவசேனா எம்பிக்கள் ஷிண்டே கோஷ்டிக்கு தாவல்? லோக்சபா கொறடா திடீர் மாற்றம்- கலங்கும் உத்தவ் தாக்கரே