சினிமாவை மிஞ்சும் வகையில்.. மும்பை மருத்துவமனைக்கு கீழே சுரங்கப்பாதை.. 132 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம்
மும்பை: மும்பை ஜே.ஜே ஆஸ்பத்திரியில் 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த 200 மீட்டர் நீளமுடைய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. .19 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை குறித்த தகவல் தொல்லியல் துறையிடம் சமர்பிக்கப்படும்.
நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் பல்வேறு முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளது.
மும்பை தாஜ் ஒட்டல், தேசிய பங்குச்சந்தை கட்டிடம் என்று மும்பையின் அடையாளமாக பல கட்டிடங்கள் உள்ளன.
மும்பை ஜேஜே மருத்துவமனை
அந்த வகையில், மும்பையின் பைகுல்லாவில் அமைந்துள்ள ஜேஜே மருத்துவமனையும் மிகவும் புகழ் பெற்றது. கடந்த 1845-ஆம் ஆண்டு சர்ஜாம்ஷெட்ஜி ஜே.ஜிபாய் என்பவர் நினைவாக ஜேஜே என்ற பெயரில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த மருத்துவமனையுடன் நர்சிங் மருத்துவ கல்லூரியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த நர்சிங் கல்லூரியில் உள்ள ஒரு பகுதியில் துளை ஒன்றை புதிதாக மருத்துவமனை ஊழியர்கள் கண்டறிந்தனர்.
200 மீட்டர் தூரத்தில் பெரிய சுரங்கம்
புதிதாக தென்பட்ட இந்த துளையை உற்று பார்த்த போது உள்ளே சுரங்க பாதை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை டீன் பல்லவி சாப்லேவுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் சுரங்கப்பாதையை ஆய்வு செய்ததில் 200 மீட்டர் தூரத்தில் பெரிய சுரங்கம் ஒன்று தென்பட்டது. இதைப்பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் வியந்து போகினர்.
4.5 அடி உயரத்தில்..
இது குறித்து மருத்துவமனை டீன் ம பல்லவி சப்லே கூறுகையில், "மும்பை கலெக்டர் மற்றும் மகாராஷ்டிரா தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு இந்த சுரங்கப்பாதை குறித்து தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார். இந்த சுரங்கப்பாதை 4.5 அடி உயரத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட தூண்களுடன் அமைந்து இருப்பதாகவும் சுரங்கத்தின் நுழைவுப்பகுதி பெரிய பாறைக்கற்களால் மூடப்பட்டு இருப்பதாகவும் சுரங்கத்தை ஆய்வு செய்த ரதோட் என்ற மருத்துவர் தெரிவித்தார்.
உரிய ஆய்வு நடத்தப்படும்
இந்த சுரங்கப்பாதையில் 1890-ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டு உள்ளது.19 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை குறித்த தகவல் தொல்லியல் துறையிடம் சமர்பிக்கப்படும். இதைத்தொடர்ந்து தொல்லியல் துறை உரிய ஆய்வு நடத்தும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.