"இந்தி பேசாதவர்கள்.. இந்தியனே இல்லை என சொல்வது எனக்கு சரியாக படவில்லை!" நிர்மலா சீதாராமன் பரபர
மும்பை: வங்கிகளில் வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்படுவது அதிகரித்து வருவதாகப் புகார் கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் அதிகப்படியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ஒரு துறையாக வங்கித் துறை உள்ளது. இதனால் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் பல ஆயிரம் பேர் அதற்காகத் தனியாகத் தயாராகி வருகின்றனர்.
பெரும்பாலான வங்கிகளில் இருக்கும் காலியிடங்கள் தேசிய அளவில் நடத்தப்படும் ஐபிபிஎஸ் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

வங்கிகள்
தேசிய அளவிலான தேர்வு என்பதால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி தெரியாத பலரும் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. முதலில் நகரங்களில் மட்டுமே வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், இப்போது கிராமங்களிலும் கூட இப்படி மொழி தெரியாதவர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.

மொழி பிரச்சினை
இதன் காரணமாக வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் முதலில் வங்கிகளில் 20 முதல் 30 சதவிகிதம் வரை மட்டுமே வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50% அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2022-23 பணியாளர் தேர்வு பட்டியலிலும் கூட 50% அதிகமானோர், வெளிமாநிலத்தவர்களே இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

நிர்மலா சீதாராமன்
வங்கி என்பது அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தத்தந்த மாநில மொழிகளைத் தெரிந்தவர்களுக்குப் பணி தர வேண்டும் என்ற அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். வங்கிகள் உள்ளூர் மொழியில் பேசக்கூடிய ஊழியர்களைப் பணி அமர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

உள்ளூர் மொழி தெரிய வேண்டும்
மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் 75ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், "நீங்கள் பிஸ்னஸ் செய்யவே இருக்கிறீர்கள். குடிமக்களிடம் மதிப்பு முறையை வளர்ப்பது உங்கள் வேலை இல்லை. நம் நாட்டின் பன்முகத்தன்மையின் காரணமாக சில முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த நபரை வேலைக்கு எடுங்கள்.

இந்தி
பிராந்திய மொழியில் பேசாத ஊழியர்கள், "நீ இந்தி பேசவில்லை என்றால் நீ இந்தியனே இல்லை" என்று சொல்லும் அளவுக்குத் தேசபக்தி உள்ள ஊழியர்கள் இருப்பது எல்லாம் எனக்குச் சரியாகப் படவில்லை. அவர்கள் உங்கள் பிஸ்னஸுக்கும் உதவ மாட்டார்கள். கிளைகளில் பணியமர்த்தப்பட்ட நபர்களை முறையாகப் பணி அமர்த்துங்கள். உள்ளூர் மொழி தெரியாத நபர்கள் மக்களுடன் உரையாடும் பணிகள் வழங்கக் கூடாது.

வங்கிகளுக்கு அட்வைஸ்
சரியான வகையில் ஆட்களை பணியமர்த்தினால் மட்டுமே பிஸ்னஸ் செய்ய முடியும். பாசிட்டிவான முறையில் நாம் வாடிக்கையாளர்களை அணுக வேண்டும். அவர்களுக்கு சர்வீஸ் செய்யவே வங்கிகள் உள்ளன. வங்கிகள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தேவையானதைச் செய்து தர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications