போலி இந்துத்துவா பேசுது பாஜக.. கூட்டணி வெச்சு 25 வருஷம் வீண்- ஓவரா வருத்தப்படும் உத்தவ் தாக்கரே
மும்பை: பாரதிய ஜனதா கட்சி போலி இந்துத்துவா சித்தாந்தம் குறித்து பேசுகிறது; பாஜகவுடன் 25 ஆண்டுகாலம் கூட்டணி அமைத்தது வீண் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் நீண்டகாலம் கூட்டணி வைத்திருந்த ஒரே கட்சி சிவசேனாதான். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் இந்த கூட்டணியை முறித்தது.
மீண்டும் முழு லாக்டவுன்? மகாராஷ்டிராவில் புதிய உச்சம்.. புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த உத்தவ் தாக்கரே
கூட்டணி ஆட்சி
யாருமே எதிர்பார்க்காத வகையில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்தன. பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் 3 ஆண்டுகளாக இந்த கூட்டணி ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவாவில் மெகா கூட்டணி முயற்சி
இந்த நிலையில் கோவா, உ.பி. சட்டசபை தேர்தல்களிலும் சிவசேனா போட்டியிட இருக்கிறது. கோவாவில் மகாராஷ்டிரா பாணியில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது பாஜக அல்லாத அத்தனை எதிர்க்கட்சிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் உட்பட அத்தனை கட்சிகளையும் இணைத்து மெகா கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் உறுதி செய்திருந்தார். ஆனால் அந்த கூட்டணி அமையவில்லை.
பாஜக மீது அட்டாக்
கோவா, உ.பி. தேர்தல் களத்தில் சிவசேனாவை கடுமையாக விமர்சித்து வருகிறது பாஜக. இதனிடையே சிவசேனாவின் நிறுவனர் பால்தாக்கரேவின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு பதிலளித்து பேசியதாவது: பாஜக மட்டுமே இந்துத்துவா குறித்து பேசவில்லை. இப்போதைய பாஜகவினர் நியோ இந்துத்துவவாதிகள். அவர்கள் அதிகாரத்துக்காக மட்டுமே போலி இந்துத்துவம் பேசுகிறவர்கள். அனைவரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி தூர எறிந்துவிடுவர்.
25 ஆண்டுகள் வீண்
பாஜகவுடன் 25 ஆண்டுகாலம் சிவசேனா கூட்டணி அமைத்திருந்தது. இப்போது அந்த 25 ஆண்டுகாலத்தை வீணாக்கிவிட்டோமே என வருத்தப்படுகிறோம். இந்த நியோ இந்துத்துவவாதிகள், தங்களது சொந்த நலன் குறித்து மட்டுமே சிந்திக்கின்றனர். செயல்படுகின்றனர். நாங்கள் பாஜகவின் சவாலை ஏற்று தனித்துப் போட்டியிட தயாராக உள்ளோம். ஆனால் பாஜக அதிகார பலத்துடன் அதாவது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என மத்திய புலனாய்வு ஏஜென்சிகளுடன் தேர்தல் களத்துக்கு வரக் கூடாது: இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.