தாக்கரே அப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை.. பட்னாவிஸ் வருத்தம்.. பெரிதாகும் சிவசேனா பாஜக மோதல்!
சிவசேனா கட்சி பிரதமர் மோடியை விமர்சிப்பதை ஏற்க முடியாது, அவர்களுடன் 50:50 ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை: சிவசேனா கட்சி பிரதமர் மோடியை விமர்சிப்பதை ஏற்க முடியாது, அவர்களுடன் 50:50 ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகி உள்ளார். நாளையோடு அவரின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் ராஜினாமா செய்தார். அதோடு மகாராஷ்டிராவில் மொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
இந்த நிலையில் பதவி விலகலுக்கு பின் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் விரைவில் முழுமையான ஆட்சி அமைய வேண்டும். தற்போது கவர்னர் என்னை பொறுப்பு முதல்வராக இருக்க சொல்லி உள்ளார். அடுத்த ஆட்சி அமையும் வரை நான் என் பொறுப்பை தொடர்வேன். மக்களின் முடிவை மதிக்க வேண்டும். மீண்டும் அவர்கள் மீது தேர்தலை திணிக்க கூடாது.
சிவசேனா எப்படி
சிவசேனாவிடம் 50:50 ஒப்பந்தம் எதையும் நாங்கள் போடவில்லை. 2.5 வருடம் முதல்வர் பொறுப்பை தருவோம் என்று ஒப்பந்தம் செய்யவில்லை. இதை பற்றி ஆலோசித்தோம். ஆனால் எந்த விதமான ஒப்பந்தமும் போடப்படவில்லை. ஆனால் சிவசேனா ஒப்பந்தம் செய்ததாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. உத்தவ் தாக்கரே பேட்டி அதிர்ச்சி தருகிறது.
அமித் ஷா இல்லை
உத்தவ் தாக்கரே இப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை. அமித் ஷாவும் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ் உடன் பேச நேரம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் பேச நேரம் உள்ளது, ஆனால் எங்களுடன் பேச அவர்களுக்கு நேரம் இல்லை. உத்தவ் தாக்கரே நான் செய்யும் போனை கூட எடுப்பது இல்லை.
பால் தாக்கரே எப்படி
பால் தாக்கரேவை நாங்கள் மதிக்கிறோம். அதேபோல் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக நாங்கள் எதுவும் சொன்னதில்லை. ஆனால் கடைசி 10நாட்களாக சிவசேனா எங்களை மோசமாக விமர்சனம் செய்கிறது. பிரதமர் மோடியை விமர்சனமா செய்கிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
குதிரை பேரம்
நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். இல்லையென்றால் மன்னிப்பு கேளுங்கள். நாங்கள் தொடர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்வோம். ஆனால் குதிரை பேரம் செய்ய மாட்டோம், என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.