ட்ரிடென்ட் ஹோட்டலில் நடந்த அந்த சந்திப்பு.. சரத் பவார் ஆடிய கடைசி கட்ட கேம்.. வெளியாகும் பின்னணி!
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்ததற்கு ட்ரிடென்ட் ஹோட்டலில் நடந்த முக்கிய கூட்டம் ஒன்றுதான் காரணம் என்கிறார்கள்.
மும்பை: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்ததற்கு ட்ரிடென்ட் ஹோட்டலில் நடந்த முக்கிய கூட்டம் ஒன்றுதான் காரணம் என்கிறார்கள்.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த ஒரு வாரமாக யாருமே எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து இருக்கிறது. அங்கு சிவசேனா ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சிக்கு வந்தது.
ஆனால் பாஜகவும் அங்கு ஆட்சியில் நீடிக்கமுடியவில்லை. வெறும் மூன்று நாட்கள் ஆட்சியில் இருந்த தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் அரசியல் சாகசம் பாஜகவிற்குள் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது.
என்ன காரணம்
நேற்று மதியம்தான் அஜித் பவார் அங்கு துணை முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார். அதோடு அவர் பாஜகவிற்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார். ஆனால் இவர் தன்னுடைய விலகலுக்கு சரியான காரணத்தை சொல்லவில்லை. பர்சனல் காரணங்களால் ஆதரவை வாபஸ் பெறுகிறேன் என்று மட்டும் குறிப்பிட்டார்.
ஹோட்டலில் நடந்த சந்திப்பு
இந்த நிலையில் நேற்று காலையிலேயே அஜித் பவார் சரத் பவார் இரண்டு பேரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதிகாலையில் மும்பையில் உள்ள ட்ரிடென்ட் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உடன் இருந்திருக்கிறார். இவர்கள் சுமார் 2 மணி நேரம் பேசி உள்ளனர்.
பிரச்சனைகள்
இதில் பாஜகவுடன் சேர்ந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று சரத் பவார் எடுத்து கூறியுள்ளார். அதேபோல் உங்களுக்கு போதுமான எம்எல்ஏக்கள் பலம் இல்லை என்றும் சரத் பவார் கூறியுள்ளார். சிவசேனா உறுப்பினர்கள் சிலரும் அஜித் பவாரிடம் சமாதானம் பேசி இருக்கிறார்கள்.
இங்குதான் வெற்றி
சரத் பவாரின் அரசியல் இங்குதான் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் போதே அஜித் பவார் மனம் மாறிவிட்டார் என்று கூறுகிறார்கள். அப்போதே அவர் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தன்னுடைய பதவி விலகல் முடிவு குறித்து அறிவித்துவிட்டார் என்றும் குறிப்பிடுகிறார்கள்.