என்.ஆர்.சி. தடுப்பு முகாம்களை மகாராஷ்டிராவில் அனுமதிக்க மாட்டோம்: உத்தவ் தாக்கரே உறுதி
மும்பை: என்.ஆர்.சி. தடுப்பு முகாம்களை மகாராஷ்டிராவில் அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரேவை முஸ்லிம்களின் பிரதிநிதிகள் குழு நேற்று சந்தித்து பேசியது. இச்சந்திப்பின் போது என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையின் கீழ் தடுப்பு முகாம்களை மகாராஷ்டிராவில் அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்திருக்கிறார் உத்தவ் தாக்கரே.
மேலும் தற்போது மகாராஷ்டிராவில் உள்ள தடுப்பு முகாம்கள் என்பவை வெளிநாட்டினரை தடுத்து வைக்கக் கூடியது. என்.ஆர்.சி.-சி.ஏ.ஏ. மூலம் எந்த ஒரு சமூகத்துக்கும் அநீதி இழைக்கப்படுவதையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
அத்துடன், மகாராஷ்டிராவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில்தான் தமது அரசு முதன்மை பணியாக கொண்டிருக்கிறது. நிச்சயம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது எனவும் உத்தவ் தாக்கரே, முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்திருக்கிறார்.
இக்குழுவில் இடம்பெற்றிருந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அபு ஆஸ்மி கூறுகையில், உத்தவ் தாக்கரே அளித்த உறுதி மொழிகள் திருப்தி அளிக்கின்றன. முந்தைய பாஜக அரசைப் போல ஒருவித நெருக்கடியில் இல்லாமல் முஸ்லிம்களுக்கு நிம்மதியை தரும் வகையில் உத்தவ் தாக்கரே உறுதி கொடுத்துள்ளார் என்றார்.
இருப்பினும் பல்வேறு மாநில முதல்வர்கள் என்.ஆர்.சி.யை அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்ததைப் போல உத்தவ் தாக்கரே கூறவில்லை. இது தொடர்பாக வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்காக காத்திருப்பதாக மட்டும் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.