ஏலேய்.. யாருப்பா அது.. பிளேன் கிட்ட போய் தொட்டு பாக்குறது.. பதற வைத்த அந்த நிமிடம்!
விமானத்தை தடுத்து நிறுத்த முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
மும்பை: மும்பையில் ஒரு பதற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. விபரீதமாக எதுவும் நடக்கவில்லைதான். ஆனால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்ற அளவுக்கு அபாயகரமான சம்பவம் நடந்தேறியுள்ளது.
மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகப் பெரிய பாதுகாப்பு விதி மீறலாக இது பார்க்கப்படுகிறது. அனைவரையும் இது அதிர வைத்துள்ளது.
பிற்பகல் 1 மணி இருக்கும். விமான நிலையத்தில் ஒரு ஸ்பைஸ்ஜெட் விமானம் கிளம்பத் தயாராக ரன்வேயில் நின்றிருந்தது. பெங்களூர் செல்லும் விமானம் அது. அப்போது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து ஒருவர் மெதுவாக சுவர் ஏறிக் குதித்து உள்ளே புகுந்து விட்டார்.
தகவல்
உள்ளே புகுந்த அந்த நபர் அப்படியே விமானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இதை விமானத்தில் இருந்த பைலட் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தார். யாருடா இது விமானத்தை நோக்கி சாவகாசமாக நடந்து வருவது என்று குழம்பிய அவர் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இறக்கை
தகவல் அறிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் உடனடியாக ஜீப்களில் விரைந்தனர். அதற்குள் அந்த நபர் விமானத்தின் மூக்குக்கு வந்தார். அதன் கீழ் நின்று வேடிக்கை பார்த்தார். பிறகு வயிற்றுப் பாகம் வழியாக பின் பக்க இறக்கைப் பகுதி வரை வந்து விட்டார். விமானத்தை தொட்டுப் பார்த்தபடியே அவர் வந்து கொண்டிருந்தார்.
என்ஜின்
இத்தனையும் நடந்த பின்னர்தான் போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றிப் பார்ப்பது போல சாவாதனமாக நின்றிருந்த அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விமானி முதல் வேலையாக என்ஜினை ஆப் செய்து விட்டார். இல்லாவிட்டால் அந்த நபர் உள்ளுக்குள் உறிஞ்சப்பட்டு உயிர் போயிருக்கும்.
பாதிப்பில்லை
அந்த நபரை அப்புறப்படுத்திய பின்னர் விமானம் பெங்களூர் கிளம்பிச் சென்றது. இதுகுறித்து பின்னர் விளக்கிய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அந்த நபருக்கு மன நலம் சரியில்லை. எப்படியோ உள்ளே வந்து விட்டார். விமானத்திற்குப் பாதிப்பில்லை அந்த நபருக்கும் காயம் ஏதும் இல்லை. விமானம் திட்டமிட்டபடி கிளம்பிச் சென்றது என்றார்.
|
மருத்துவ சிகிச்சை
சம்பந்தப்பட்ட நபர் குர்லாவைச் சேர்ந்தவராம். அந்த நபரின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்த போலீஸார் அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதற்கான சான்றுகளை அவர்கள் காட்டியதைத் தொடர்ந்து கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறி அவரை அவர்களுடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.