முகேஷ் அம்பானிக்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் யாரிடம் போகும்? ரெடியாகும் திட்டம்
மும்பை: வால்டன் முதல் கோச் வரையிலான கோடீஸ்வர குடும்பங்கள், தாங்கள் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு எப்படி கடத்தின என்ற வழிகளை ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ஆய்வு செய்திருக்க கூடும் என்று தெரிகிறது.
தனது $208 பில்லியன் சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறை கையில் ஒப்படைப்பதற்கான திட்டங்களை அவர் தீவிரமாக கையில் எடுக்க தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
தெளிய விட்டு தெளிய விட்டு தாக்கும் மழை...காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு அதிகனமழை
பல செல்வந்த குடும்பங்கள் சொத்து பிரிப்பதில்தான் பிரிந்து போனதாக வரலாறு. அதை தவிர்க்கவும், தடுக்கவும் முகேஷ் அம்பானி முழு வீச்சில் களமிறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
எப்படி பிரிக்கப்படும்
64 வயதாகிறது அம்பானிக்கு. எனவே பொறுப்புகளிலிருந்து விலகி அடுத்த தலைமுறைக்கு சொத்துக்களை பரிமாற்றம் செய்வது, நிர்வாகத்தை கடத்துவது அவர் நோக்கமாக இருக்கிறதாம். வால்மார்ட் வால்டன் குடும்பத்தின் வழியை சொத்து பங்கீட்டில் கையில் எடுக்கப் போகிறார் அம்பானி என்கிறார்கள், இந்த விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள். அம்பானி, அவரது மனைவி நிதா மற்றும் இந்த தம்பதியின் மூன்று குழந்தைகள் ரிலையன்ஸை மேற்பார்வையிடும் புதிய நிறுவனத்தில் பங்குதாரர்களாக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அம்பானியின் நீண்டகால நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் ஆலோசகர்களாக இருப்பார்கள். இருப்பினும், மேலாண்மை பணி, பெரும்பாலும் வெளியாட்கள் கையில் இருக்கும். இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனம் என்பதால், அதன் அன்றாட செயல்பாடுகளைக் கையாள வல்லுநர்கள் தேவை. அதற்கேற்ப நிபுணர்கள் அங்கு நியமிக்கப்படுவார்கள்.
பணக்கார ஆசியா
உலகளவில் கிரெடிட் சூயிஸ் அமைப்பால் பட்டியலிடப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு சொந்தமான அல்லது நிறுவனங்களில், ஆசியாவைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் $5.8 டிரில்லியன் ஆகும். வட அமெரிக்கா முதலிடத்திலும், ஆசியா-பசிபிக் 2வது இடத்திலும் உள்ளது. இதில், இந்தியாவின் தொழில் துறை முன்னணி குடும்பமான முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு மட்டும் சுமார் $1.5 டிரில்லியன். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரம் திறந்து விடப்பட்டதால் இது சாத்தியமாகியுள்ளது.
சொத்து பிரிப்பு முக்கியம்
ஹாங்காங் அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆசிய குடும்ப வணிகம் மற்றும் தொழில் முனைவோர் ஆய்வுகளுக்கான டனோடோ மையத்தின் இயக்குனர் வின்னி கியான் பெங் இதுபற்றி கூறுகையில், ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் வாரிசுகளை எவ்வாறு கையாளுகிறார்கள், அவர்கள் குடும்ப செல்வம் மற்றும் அதிகாரம், எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதைப் பற்றி மக்கள் மிக உன்னிப்பாக கவனிப்பார்கள். பிற பிராந்தியங்களில் உள்ள தொழிலதிபர்களும் கவனிப்பார்கள் என்கிறார்.
செய்தி நிறுவனம்
அம்பானி, தனது விருப்பங்களை பரிசீலித்து வருகிறார், ஆனால் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சிலர் தெரிவிக்கிறார்கள். ரிலையன்ஸ் மற்றும் அம்பானியின் பிரதிநிதிகள் அக்டோபர் 27 அன்று அனுப்பிய ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி நிறுவனத்தின், விரிவான மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கவில்லை மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லையாம். எனவே சொத்து பிரிப்பு செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
3 வாரிசுகள்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்புகளில் இருந்து விலகுவதற்கான எந்த திட்டத்தையும் அம்பானி பகிரங்கமாக வெளியிடவில்லை என்றாலும், இந்த ஜூன் மாதம் பங்குதாரர்களிடம் உரையாற்றிய அம்பானி, தனது வாரிசுகளான ஆகாஷ் மற்றும் இஷா மற்றும் ஆனந்த், ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை வகிப்பார்கள் என்று முதல் சமிக்ஞையை கொடுத்தார். "ரிலையன்ஸின் அடுத்த தலைமுறை தலைவர்களான ஈஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர் இந்த மதிப்புமிக்க பாரம்பரியத்தை மேலும் வளப்படுத்துவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை," என்று அவர் அப்போது கூறினார்.