சிவசேனாவுடன் கூட்டணி இல்லை.. சரத் பவார் அதிரடி அறிவிப்பு.. மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு
Recommended Video
மும்பை: சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று சரத் பவார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பிருந்தே, பாஜகவுடன், சிவசேனா கூட்டணி அமைத்து இருந்தாலும் கூட, தற்போது திடீரென முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டு தர வேண்டும் என்று சிவசேனா போர்க்கொடி தூக்கி வருவதால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் வருகிறது.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை பெறும் என்று யூகங்கள் பரவியிருந்தன.
சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஏற்கனவே ஒரு முறையும், இன்று மற்றொரு முறையும், என, சரத் பவாரை இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த யூகங்கள் மேலும் அதிகரித்தன.
ஆனால் சஞ்சய் ராவத் உடனான சந்திப்பு பிறகு இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் சரத்பவார். அப்போது அவர் கூறுகையில், சஞ்சய் ராவத் உடனான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. மரியாதை நிமித்தமானது மட்டுமே.
அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை இணைந்து விரைவிலேயே அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசையில் அமரும்.
பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தான் மக்களின் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் அதை ஏற்று நடக்க வேண்டும். தேசியவாத காங்கிரசை பொறுத்தளவில் அரசியல் சாசன இக்கட்டு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறது.
சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி என்ற பேச்சு எங்கே இருந்து வந்தது? சிவசேனாவும் பாஜகவும் கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் கூட்டாளிகளாக இருந்து வருகிறார்கள், மறுபடியும் கூட அவர்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சிவசேனா அடுத்து எந்த பக்கம் செல்வது என்று புரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தொடரச் செய்து, கூட்டணி ஆட்சியை அமைக்குமா அல்லது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படப்போகிறதா என்பது அடுத்தடுத்த நாட்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேள்விகளாக மாறியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.












Click it and Unblock the Notifications