கடலுக்கு நடுவே பிரம்மாண்டம்! நாட்டின் நீளமான அடல் சேது பாலம்..பிரதமர் மோடி திறந்து வைத்தார்
மும்பை: நாட்டின் மிக நீளமான பாலமான 'அடல் சேது' பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் மும்பைக்கும், நவி மும்பைக்கும் இடையேயான பயண நேரம் 2 மணி நேரத்திலிருந்து 20 நிமிடங்களாக குறையும் என்று சொல்லப்படுகிறது.
மும்பை இந்தியாவின் மிக பரபரப்பான நகரங்களில் ஒன்று. டிராபிக், ஹாரன் சத்தம், சில கி.மீ தூரம் கடக்கவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி நிலை, என வாகன ஓட்டிகளை மும்பை மிகவும் சோர்வடைய செய்துவிடுகிறது. மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அதற்கேற்ப சாலை வசதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவையும் எழுந்திருக்கிறது. இதனை எல்லாம் கணக்கில் கொண்டுதான் 'அடல் சேது' பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

ரூ.17,840 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். தேசிய இளைஞர்கள் தினமான இன்று நவி மும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், ரூ.12,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் இந்த பாலத்தை திறந்து வைத்தார்.
சுமார் 22 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம், இந்தியாவின் மீக நீண்ட பாலமாகவும், நீண்ட கடல் பாலமாகவும் இருக்கிறது. இந்த பாலத்தின் மூலம் மும்பையிலிருந்து நவி மும்பைக்கு செல்லும் நேரம் 2 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைகிறது. மேலும், மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இது இணைக்கிறது.
இது தவிர மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். மேலும் மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பாலத்தில் ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கார்கள், பேருந்துகள், இதர நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பாலத்தில் அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம்.
அதேபோல இந்த பாலத்தில் ஒருமுறை பயணிக்க ரூ.250 சுங்க கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications