தனித்தீவான மும்பை.. எங்கு பார்த்தாலும் மழை நீர்.. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
மும்பை: மகாராஷ்டிரத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் மழை பாதிப்பில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மும்பையில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. இதனால் அந்தேரி, மலாட், தஹிசார் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
30 நிமிடங்கள்
மும்பை சென்ட்ரலில் இருந்து துறைமுகம் செல்லும் வழித்தடத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய விமானங்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.
மக்கள் வெளியேற்றம்
நவி மும்பையில் உள்ள பாண்டவ்கடா நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற 4 கல்லூரி மாணவிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். மும்பை கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ரயில்கள் தாமதம்
தானேவில் கனமழையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாகுர்வாடி- மங்கி ஹில்ஸ் இடையேயான ரயில் வழித்தடத்தில் பாறாங்கற்கள் விழுந்தன. இதையடுத்து சென்னை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், டெக்கான் கியூன் மற்றும் கொனார்க் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
ரெட் அலர்ட்
பால்கர், தானே, ராய்கட், நாசிக், புனே, சடாரா ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிர மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.