அடப்போங்கப்பா.. நாங்களே ரொம்ப வருத்தமா இருக்கோம்.. தாக்கரே ராஜினாமா பின்னரும் அதிருப்தி எம்எல்ஏ பரபர
மும்பை: மகாராஷ்டிராவில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் ஒரு வாரத்திற்கு மேலாக நீட்டித்த அரசியல் குழப்பம் இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. ஷிண்டே அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் கடந்த வாரம் திடீரென போர்க்கொடி தூக்கினார்,
முதலில் அவருக்கு 16 முதல் 20 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், நாட்கள் செல்ல செல்ல அவரது ஆதரவு அதிகரித்தது. இது தாக்கரேவுக்கு சிக்கலைத் தந்தது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா- கடந்த 10 நாட்களில் அரங்கேறிய போர்க்கொடி கலகங்கள்!
தாக்கரே
உத்தவ் தாக்கரே பிரச்சினையைச் சரி செய்துவிடுவார் என்றே முதலில் பலரும் கருதினர். இருப்பினும், என்சிபி- காங்கிரஸ் உடனான கூட்டணி முரணானது என்றும் அதில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் தான் பெரும்பான்மையை நிரூபிக்கச் சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு சூப்பீரம் கோர்டும் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதிருப்தி எம்எல்ஏ
இதனிடையே மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் அல்ல என்று ஏக்நாத் ஷிண்டே முகாமைச் சேர்ந்த அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். முரணான என்சிபி- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்பது தான் தங்கள் கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் சில கருத்துகள் தான் ஷிண்டேவை அதிருப்திக்குள் ஆக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
தீபக் கேசர்கர்
இது தொடர்பாக அதிருப்தி எம்எல்ஏ தீபக் கேசர்கர் கூறுகையில், "நாங்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளை உத்தவ் தாக்கரே கவனிக்கவில்லை. என்சிபி மற்றும் காங்கிரஸுடன் சண்டையிடும் போது, எங்கள் தலைவரிடமும் நாங்கள் கோபமடைந்தோம். இதில் எங்களுக்கும் வருத்தும் இருக்கவே செய்கிறது. இதற்குக் காரணம் என்சிபி மற்றும் சஞ்சய் ராவத் தான். தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகியது எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை.
கோபம்
தினமும் மத்திய அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுவதும், மத்திய-மாநிலங்களுக்கு இடையே மோசமான விரோதத்தை உருவாக்குவதுமே அவர்களின் வேலையாக இருந்தது.. எம்எல்ஏக்கள் மட்டுமில்லை பல எம்பிகள் கூட காங்கிரஸ் மற்றும் என்சிபி மீது கடும் கோபத்தில் உள்ளனர். என்சிபி மாநில தலைவர் எங்கள் பகுதிகளுக்குச் சென்று அவரது ஆட்களை முன்னிறுத்தும் வகையில் பேசுவார்.
சஞ்சய் ராவத்
எங்களால் தான் இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த உடன் அவர்கள் எங்களையே மதிக்கவில்லை. அவ்வளவு ஏன் எங்கள் கட்சியின் சஞ்சய் ராவத் கூட தொடர்ச்சியாக மத்திய அரசைச் சாடி வந்தார். இதைப் பார்த்து மக்களே வருத்தமடைந்தனர். வேறு எந்தவொரு கட்சிக்கும் இவரைப் போன்ற ஒரு நபர் செய்தித் தொடர்பாளராக இருந்துவிடக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்,
அடுத்து என்ன
பல குழப்பங்களுக்கு மத்தியில் இப்போது தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் உதவி உடன் பாஜக ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 2.5 ஆண்டுகளுக்குப் பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் என்சிபி இந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.