பட்டினி-வேலையின்மை.. ஏழைகள் நிறைந்த பணக்கார நாடாக இந்தியா.. மத்திய அமைச்சர் கட்கரி பரபர பேச்சு
மும்பை: ‛‛இந்தியா வளமை மிக்க நாடு. 5வது பெரிய பொருளாதார நாடக இந்தியா உள்ளது. இந்தியா பட்டினி, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கும் ஏழை மக்களை கொண்ட பணக்கார நாடு தான் இந்தியா'' என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பாக பேசினார்.
மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாரத் விகாஸ் பரிஷத் சார்பில் நடந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
இந்த விழாவில் அவர் இந்தியாவில் உள்ள மக்களின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பற்றி சில விஷயங்களை கூறினார். இதுபற்றி நிதின் கட்கரி கூறியதாவது:

ஏழைகளோடு பணக்கார நாடு
உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். நாம் ஏழை மக்கள் தொகையை கொண்ட பணக்கார நாடு. நமது நாடு வளமை மிக்கது. ஆனால் மக்கள் வறுமை, பட்டினி, வேலையின்மை, பணவீக்கம், சாதி பாகுபாடு, தீண்டாமை உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இது சமூக முன்னேற்றத்துக்கு நல்ல விஷயமாக இல்லை.

இடைவெளி அதிகரிப்பு
தற்போது சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏழை, பணக்காரர்கள் இடையேயான இடைவெளி என்பது அதிகரித்துள்ளது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை போல, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்து உள்ளது. இந்த இடைவெளியை குறைப்பது அவசியமாகும்.

சவாலான பயணம்
ஏழை, பணக்காரர்கள் இடையேயான இடைவெளியை குறைக்க கல்வி, சுகாதாரம், சேவை துறைகளில் கவனமுடன் பணியாற்ற வேண்டி உள்ளது.பாரத் விகாஸ் பரிஷத்தின் நோக்கம் தெளிவானது. இருப்பினும் சமூக கடமை, உணர்வுடன் நாம் எப்படி வெவ்வேறு வகையான பிரிவுகளில் பணியாற்ற போகிறோம் என்பது தான் சவாலானதாக உள்ளது.

21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது
நாம் நமது லட்சியத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே அதை சாதிக்க வேகமாக செயல்பட வேண்டும். 21ம் நூற்றாண்டு என்பது இந்தியாவுக்கானதாக இருக்கும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் தங்களின் பங்களிப்பை செய்ய வேண்டும்'' என பேசினார்.












Click it and Unblock the Notifications