மும்பையில் குழாயடிச்சண்டை: குடிநீர் பிடிக்கும் தகராறில் அண்ணனின் மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி
மும்பையில் குடிநீருக்காக நடந்த குழாயடிச்சண்டை கொலையில் முடிந்துள்ளது. அண்ணனின் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார் தம்பி.
மும்பை: தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நிகழலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஆங்காங்கே குழாயடிச்சண்டைகளும் அரங்கேறி அடிதடியில் முடிகின்றன.
ஒரே வீட்டில் பங்காளிகளாக வசிக்கும் அண்ணன் தம்பிகள் கூட தண்ணீரை பங்கிட்டுக்கொள்வதில் தகராறு செய்கின்றனர். தண்ணீரை யாரும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அந்த அளவிற்கு தண்ணீர் பிரச்சினை இந்தியா முழுவதும் தலைவிரித்தாடுகிறது.
மும்பையில் தண்ணீர் பங்கீடு தகராறு கொலையில் முடிந்துள்ளது. தன் அண்ணனின் மனைவி என்றுகூட பாராமல் கொழுந்தன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பலியான பெண்ணின் பெயர் நமிதா போகரே என்பதாகும்.
முன்பையின் மேற்கு பகுதியில் ஒரு பொதுக் குழாயில் தண்ணி பிடிக்கும் போது அண்ணிக்கும் கணவரின் தம்பிக்கும் இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சு முற்றி சண்டையானது. ஒரு குடம் கூட அதிகம் பிடிக்க விடமாட்டேன் என்று சண்டை போட்ட அண்ணியை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
இறந்த பெண்ணின் கணவர் தனது தம்பி மீது போலீசில் புகார் அளித்தார். தன் மனைவிக்கும் தம்பிக்கும் தண்ணீர் பிடிக்கும்போது இடையே ஏற்பட்ட பிரச்சினையில் தன்னுடைய மனைவியை தன் தம்பி அரிவாளால் வெட்டி கொலைசெய்யப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர போலீஸ் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் விதிப்படி, 302, 37 (1) (ஏ) மற்றும் 135 பிரிவுகளின் கீழ் எப் ஐ ஆர் பதிவு செய்து போலீஸார் கொலையாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு அன்றாடம் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காததால் நாட்டின் பல பகுதிகள் கடுமையானதண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் பங்கை பெற தங்களுக்குள் எந்த உறவுமுறையும் பார்க்காமல் சண்டையிட்டு போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அரசாங்கம் தான் இதற்கான தீர்வை கொண்டு வந்து அப்பாவி மக்களை காப்பாற்றவேண்டும்.