ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதியின் இலவச திட்டங்கள் இருக்கும்: அமைச்சர் மெய்யநாதன்
நாகை: ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டு வந்த இலவசங்கள் இருக்கும் என்று தெரிவித்த தமிழக சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், கருணாநிதி கொண்டு வந்த இலவச கல்வியில் படித்துதான், தற்போது அமைச்சராக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இலவசங்கள் தேவையா, தேவையில்லையா என்கிற விவாதம் தேசிய அளவில் கவனம் பெற தொடங்கியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் கூடாது என்றும், இலவசங்களால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது என்றும் பேசி வருகிறார். தேர்தலின்போது இலவசங்களை அறிவிக்க, கட்சிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வினி உபாத்தியாய டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இலவச அறிவிப்புகள் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்துவதாகக் கருத்து தெரிவித்தது. ஒவ்வொரு கட்சியும் இலவசங்களால் பயனடைகிறது. இலவசங்களை எதிர்ப்பவர்கள், அதனை தடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எதிர்க்கட்சிகள் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. திராவிட அரசியல் கட்சிகள் கொண்டுவந்த இலவச திட்டங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போது இலவச திட்டங்கள் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இந்நிலையில், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும், கலைஞர் கொண்டு வந்த இலவச திட்டங்களால்தான் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
நாகை மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7,381 மாணவ, மாணவிகளுக்கு 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மிதி வண்டிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து நாகை சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில், நிரந்தர வீட்டிற்கான பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்ய நாதன், ஏழைகள் இருக்கும் வரை கலைஞர் கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும். கலைஞர் கொண்டுவந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் , சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, ஷாநவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications