எமர்ஜன்சி அப்டேட்.. பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதலால் மொத்தமாக மாற்றம் செய்த ஆப்பிள்.. புதிய பாதுகாப்பு
நியூயார்க்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் மேக் லேப்டாப்களில் அவசரமான அப்டேட்களை செய்துள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் மீதான பாதுகாப்பு நம்பகத்தன்மை குறைந்த நிலையில் புதிய பாதுகாப்பு அப்டேட்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுக்க பெகாசஸ் ஸ்பைவேர் குறித்த செய்திகள் கடந்த ஜூலை மாதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், முன்னாள் நீதிபதி ஒருவர், பல பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தொடங்கி பல முன்னணி பிரபலங்களின், அரசியல் தலைவர்களின் போன்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க வேறு சில நாடுகளிலும் ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக இந்த பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பெகாசஸ் என்பது இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ குருப்பின் தயாரிப்பு ஆகும். பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உலகின் அரசுகளுக்கு மட்டும் விற்பனை செய்து வருகிறது.
பெகாசஸ்: நாங்க ஒட்டு கேட்கவில்லை... விசாரிக்க வல்லுநர் குழு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
புகார்
இந்த நிலையில் ஐபோன் உள்ளிட்ட பல்வேறு போன்களில் எளிதாக இந்த பெகாசஸ் ஸ்பைவேர் நுழைந்து ஹேக்கிங் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. "பெகாசஸ் புராஜக்ட்" என்ற பெயரில் தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடங்கங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் அடிப்படையில் இந்த புகார்கள் வைக்கப்படுகின்றன.இந்த புகார் காரணமாக ஐபோன் மீதான நம்பத்தன்மை பலருக்கும் குறைந்தது. இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி வாங்கிய பலர் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் . "பெகாசஸ் புராஜக்ட்" ஜீரோ கிளிக் அட்டாக் மூலம் தாக்க கூடியது.
ஜீரோ கிளிக் அட்டாக்
ஜீரோ கிளிக் அட்டாக் என்பது ஒருவரின் போனுக்கு எந்த லிங்கும் அனுப்பாமல், வெறும் வெற்று மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டு, அதை போனின் உரிமையாளர் திறந்து கூட பார்க்காமலே ஹேக் செய்வது ஆகும். அதாவது உங்களுக்கு ஒரு blank மெசேஜை அனுப்பிவிட்டு, அதை நீங்கள் திறந்து கூட பார்க்காமலே உங்கள் போனை ஹேக் செய்வது ஆகும். முன்பெல்லாம் ஹேக் செய்ய உங்களுக்கு ஒரு லிங்கு அனுப்பப்படும். போனில் உங்களுக்கு வரும் லிங்கை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் பெகாசஸ் உங்கள் போனுக்குள் நுழையலாம். யாராவது ஒரு வீடியோ லிங்க் அனுப்பி பாருங்கள் என்று சொன்னாலோ அல்லது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஒரு லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னாலோ அதன் மூலம் இந்த பெகாசஸ் உங்கள் போனுக்குள் வரலாம்.
ஐபோன்
இதை ஒன் கிளிக் அட்டாக் என்று கூறுவார்கள். இதில் இன்னொரு ஹேக் வகைதான் ஜீரோ கிளிக் அட்டாக். ஆப்பிள் போன்களில் இந்த பிரச்சனை உள்ளது. ஐ மெசேஜ் செயலில் இருக்கும் பக்ஸ் காரணமாக, வைரஸ் மெசேஜ் ஒன்றை உங்களுக்கு அனுப்பி பெகாசஸ் ஸ்பைவேரை உங்கள் போனில் செலுத்த முடியும். நீங்கள் அந்த மெசேஜை திறந்து பார்க்கவில்லை என்றாலும் கூட பெகாசஸ் உங்கள் போனில் நுழைந்துவிடும். இது ஜீரோ கிளிக் அட்டாக். இதனால்தான் ஐபோன் பயனாளிகள் பலர் இந்த அட்டாக்கில் பாதிக்கப்பட்டனர். பிரபலங்கள் பலர் ஐபோன் வைத்து இருப்பதால் எளிதாக சிக்கினார்கள்.
மாற்றம்
இந்த நிலையில்தான் ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது ஐபோனில் புதிய பாதுகாப்பு அப்டேட்டை செய்துள்ளது. சவுதியை சேர்ந்த சிட்டிசன் லேப் என்ற பொது நல அமைப்பு இந்த பிரச்னையை கண்டிபிடித்துள்ளது. ஐபோனில் இருக்கும் இந்த பாதுகாப்பு குறைபாடை அந்த நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. இந்த நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் புதிய அப்டேட்டை செய்துள்ளது. ஹேக்கிங் எதுவும் நடக்க முடியாத வகையில் இதில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
அப்டேட்
அதன்படி ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 14.8, கணினியின் மேக் ஓஎஸ் 11.6 மற்றும் வாட்ச் ஓஎஸ் 7.6.2 ஆகிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. உடனடியாக இந்த அப்டேட்களை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இது பாதுகாப்பை உறுதி செய்யும் அப்டேட்களுடன் வரும் நாட்களில் இன்னும் புதிய பாதுகாப்பு அப்டேட்கள் வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.