இந்தியா - சீனா - ரஷ்யா.. உருவான புது டீம்.. அமெரிக்கா தாக்கு பிடிக்கவே முடியாது.. வல்லுநர் வார்னிங்!
நியூயார்க்: டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விதித்துள்ள கட்டண வரி விதிப்புகள், இந்தியாவைச் சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான கூட்டணிக்கு இட்டுச் செல்கின்றன என அமெரிக்க நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். அண்மையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் இது தெளிவாகத் தெரிந்தது... அமெரிக்காவிற்கு இது கடுமையான சிக்கலை ஏற்படுத்தும், சர்வதேச அரசியலில் அமெரிக்கா இந்த அணியை தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் (NYU) மூத்த வெளிநாட்டு ஆய்வுப் பணியாளர் எட் பிரைஸ் எச்சரித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, SCO உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக்குகிறது. இது சக்திவாய்ந்த இந்தியா-சீனா-ரஷ்யா அணி உருவாகும் அபாயத்தை உருவாக்குகிறது என்று அவர் எச்சரித்து உள்ளார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் (NYU) மூத்த வெளிநாட்டு ஆய்வுப் பணியாளர் எட் பிரைஸ், "சீனர்கள், ரஷ்யர்கள் மற்றும் இந்தியர்கள் பொருளாதார ரீதியாக ஒரு கூட்டணியை உருவாக்கினால், ராணுவ ரீதியாகவும் அது பலமாக மாறும். 21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவால் போட்டியிடவே முடியாது. நாம் திரும்பி வீட்டுக்குப் போவதே நல்லது.. அந்த கூட்டணியை எதிர்க்கவே முடியாது. அந்த அளவிற்கு வலிமையான கூட்டணி இது" என்று கூறினார்.
இந்தியா டிரம்ப் மோதல்
வாஷிங்டனின் கடுமையான அணுகுமுறை காரணமாகவே இந்தியா தனது பலநாள் எதிரி சீனாவுடன் நெருக்கமாகி உள்ளது. டிரம்ப் செயலால் இந்தியாவிற்கு வேறு வழியில்லை. இந்தியா மீது 50% வரி விதித்தால், இந்தியா மற்ற வர்த்தகப் பங்காளர்களைத்தான் தேடும். இந்தியா ஏன் SCO கூட்டத்தில் பங்கேற்கிறது அல்லது பிரதமர் மோடி ஏன் அங்கு இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான காரணம் நமக்குத் தெரியும். அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. இது தவறு. இதனால் இறுதியாகச் சீனா மட்டுமே பயனடைய முடியும்.. டிரம்ப் செயலால் அமெரிக்காவிற்கு எந்த பலனும் இல்லை, என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் (NYU) மூத்த வெளிநாட்டு ஆய்வுப் பணியாளர் எட் பிரைஸ் கூறி உள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு ரீதியான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது புதிய வேர்ல்டு ஆர்டருக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வர்த்தக தடைகளை இந்தியா எதிர்க்கும் நிலையில் ரஷ்யா - சீனாவுடன் இந்தியா நெருக்கமாகி உள்ளது. இது உலக அளவில் புதிய அதிகார சமநிலையை (New World Order) உருவாக்கும் சாத்தியக்கூறுகளையும் ஏற்படுத்தலாம் என்றும் கருதுகின்றனர்.
தற்போதைய உலக நிலை என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதிக்கம், ஆசியாவில் சீனா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு, சீனா - ரஷ்யா இடையேயான நட்பு ஆகியவற்றின் கலவையாகும். இந்தச் சூழலில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே உலக சட்டத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறினால், அது ஒரு புதிய அதிகார சமநிலையாக இருக்கும். அதாவது அமெரிக்காவின் வீழ்ச்சியாக அது இருக்கும். இத்தகைய மாற்றங்கள் உலகப் போரின் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியா SCO மாநாடு
சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த 2025 SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் கைகோர்த்து சிரித்தபடி இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் இதை ஒரு திருப்புமுனை சந்திப்பு மற்றும் புதிய அதிகார சமநிலையின் தோற்றம் என்று வர்ணிக்கின்றனர்.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகத் தடைகள் மற்றும் இந்தியாவின் மீதான விமர்சனங்கள் காரணமாக, இந்தியா அமெரிக்காவிற்கு எதிரான சீனா மற்றும் ரஷ்யாவின் அணியில் இணைந்துள்ளது. இது ஆரம்பத்தில் ஒரு நிலைப்பாடாக இருந்தபோதிலும், இந்தியா இதை இப்போது தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. இந்தியாவிற்கு ஆதரவாக சீனாவும், ரஷ்யாவும் களமிறங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து உள்ள நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா களமிறங்கி உள்ளது.
இந்தியாவிற்கும் - சீனாவிற்கு நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அமெரிக்க வரி சர்வாதிகார விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கி உள்ளது. அதேபோல் இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான இந்தியாவின் நீண்ட கால் நட்பு நாடான ரஷ்யாவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications