சோதனை கூடம்.. லீக்கான கொரோனா.. மீண்டும் விசாரிக்கும் அமெரிக்க உளவுத்துறை.. சீனாவை நெருக்க பிளான்
கொரோனா வைரஸ் சீனாவில் சோதனை கூடத்தில் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது, அது தவறுதலாக வெளியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா உளவுத்துறை தொடர்ந்து கூறி வருகிறது.
நியூயார்க்: கொரோனா வைரஸ் சீனாவில் சோதனை கூடத்தில் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது, அது தவறுதலாக வெளியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா உளவுத்துறை தொடர்ந்து கூறி வருகிறது.
Recommended Video
கொரோனா காரணமாக உலகம் முழுக்க 2,084,022 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 134,669 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா உருவாகி 4 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் கூட கொரோனா குறித்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை.
கொரோனா எப்படி உருவானது, எங்கிருந்து முதலில் பரவியது என்பது இப்போது வரை மர்மமாக இருக்கிறது. கொரோனாவின் தோற்றம் குறித்த கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
வுஹன் மார்க்கெட்
கொரோனா சீனாவில் இருக்கும் வுஹன் மார்க்கெட் சென்ற நபர்களுக்குத்தான் முதலில் தோன்றியது. அங்கு சென்ற 32 பேருக்குத்தான் முதலில் கொரோனா ஏற்பட்டது. அதனால் இந்த வைரஸ் வுஹன் மார்க்கெட்டில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேபோல் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ இயற்கையில் உருவானது போலத்தான் இருக்கிறது, செயற்கையானது போல இல்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனா மறுப்பு
ஆனால் இதை அமெரிக்கா தொடக்கத்தில் மறுத்தது. அமெரிக்க உளவுத்துறை இந்த செய்தியை தொடக்கத்தில் வெளிப்படையாக மறுத்தது. அதன்படி இந்த வைரஸ் இயற்கையாக உருவானது போல தெரியவில்லை. சீனாவில் சோதனை கூடம் ஒன்றில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு இருக்கலாம். இது தொடர்பாக விசாரிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் சீனா இதை வெளிப்படையாக மறுத்தது. சீனா மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இதை மறுத்தனர்.
மீண்டும் சோதனை
இந்த நிலையில் இந்த மறுப்புக்கு இடையில் தற்போது அமெரிக்க உளவுத்துறை மீண்டும் இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்று ஆராய்ச்சி செய்ய உள்ளது. ஆனால் இந்த வைரஸ் பயோ யுத்தத்திற்காக உருவாக்கப்பட்டு இருக்காது என்பதையும் அமெரிக்க உளவுத்துறை ஒப்புக்கொள்கிறது. அதாவது இந்த வைரஸ் வேறு சில ஆராய்ச்சிக்காக ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும், அங்கிருந்து கசிந்து இருக்கும். இதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்போம் என்று கூறுகிறார்கள்.
போர் கிடையாது
அதாவது அந்த ஆராய்ச்சி கூடத்தில் ஏதாவது ஒரு விஞ்ஞானிக்கு கொரோனா தாக்கி இருக்கலாம். அவர் வெளியே வந்து கொரோனாவை பரப்பி இருக்கலாம். யாராவது செய்த தவறு மூலம் இந்த கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கண்டிப்பாக இது பயோ ஆயுதமாக இருக்காது. ஆனால் இதை வைத்து ஏன் சோதனை செய்தார்கள் என்று கண்டுபிடிப்போம் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவிக்கிறது.
அரசு அழுத்தம்
அமெரிக்க உளவுத்துறையின் இந்த திடீர் சோதனைக்கு காரணம் அமெரிக்க அரசின் அழுத்தம்தான் என்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருகிறார். அமெரிக்காவில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தங்கள் தவறை திசை மாற்ற டிரம்பின் குடியரசு கட்சி அந்நாட்டு உளவுத்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று கூறுகிறார்கள்.
எப்படி தொடர்பு படுத்த திட்டம்
இதற்கு அமெரிக்க உளவுத்துறை பெரிய திட்டம் ஒன்றை வைத்துள்ளது என்றும் கூறுகிறீர்கள். அதன்படி வுஹன் நகரத்தில் உள்ள வைராலஜி மையத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்து இருக்கும். அந்த வைரலாஜி மையத்தில் பணியாற்றிய நபர்களை சோதனை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். அவர்களை உளவு பார்த்து அமெரிக்க உளவுத்துறை சோதனைகளை செய்யும் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் உண்மைகள் வெளியே வரும் என்று அமெரிக்கா நம்புகிறது.
சீனா அனுமதிக்காது
ஆனால் இதற்கு சீனா அனுமதி அளிக்காது என்றும் கூறுகிறார்கள். சீனா அமெரிக்க அதிகாரிகளை உள்ளே அனுப்பாது. கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை என்பதில் சீனா உறுதியாக உள்ளது. அதனால் சீனா கண்டிப்பாக அமெரிக்க அதிகாரிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். அதே சமயம் சீனா இதற்கான விலையை கண்டிப்பாக கொடுக்கும் என்று அமெரிக்க தரப்பு கூறுகிறது.