பூமியை மறைக்கும் செயற்கைக்கோள்கள்! ஏலியனை கண்டுபிடிக்க முடியாதாம்.. விஞ்ஞானிகளின் ஷாக் ரிப்போர்ட்
பூமியில் உள்ள தொலைநோக்கிகள் விண்வெளியில் இருக்கும் +25 magnitude வெளிச்சம் கொண்ட நட்சத்திரங்களை ஆய்வு செய்ய பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
நியூயார்க்: பூமியின் மேல் ஏகப்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றி வரும் நிலையில் இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் நம்மால் எதிர்காலத்தில் 'ஏலியன்களையோ', பூமி மீது மோத உள்ள விண்கற்களையோ எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பிரிட்டனின் 'தி இன்டிபென்டன்ட்' இ-பேப்பர் கூறுகையில், "தற்போதைய நிலவரப்படி சுமார் 8,000க்கும் அதிகமான செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. இது 2019ம் ஆண்டில் இருந்த செயற்கைக்கோளின் எண்ணிக்கையை விட சுமார் 4 மடங்கு அதிகம். அதேபோல குறைந்த தூரத்தில் பூமியின் சுற்றுவட்டபாதையில்(low Earth orbit) அதிகபட்சமாக 4 லட்சம் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திக்கொள்ளலாம்.
இதில் தற்போது வரை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் 12 ஆயிரம் செயற்கைக்கோள்களுக்கு அனுமதி பெற்று 2,000 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இது 'ஸ்டார் லிங்க்' எனப்படும் ஒரு திட்டத்தின் சிறிய பகுதிதான். இந்த திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி அதன் மூலம் கிராமப்புற பகுதிகளிலும் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

குறைந்த தூர செயற்கைக்கோள்கள்
ஏற்கெனவே பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் 8 ஆயிரம் பெரிய செயற்கைக்கோள்கள், தற்போது புதியதாக வரவுள்ள low Earth orbit செயற்கைக்கோள் என அனைத்தும் விண்வெளியை மறைத்துவிடும். இவ்வாறு மறைப்பதால் விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை சரியாக பார்க்க முடியாது" என்று கூறியுள்ளது. அதேபோல கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியரான டோனி டைசன் கூறுகையில், "2030ம் ஆண்டில் நீங்கள் எங்காவது கிராமத்தில் இருந்து வானத்தை பார்த்தால் அது மிகக் கொடூரமான ஒன்றாக இருக்கும். வானில் செயற்கைக்கோள்கள் நகர்ந்துக்கொண்டு இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.

அளவு
இந்த செயற்கைக்கோள்களின் வெளிச்சத்தில் உங்களால் அதன் பின்னால் விண்வெளியில் இருக்கும் நட்சத்திரத்தை சரியாக பார்க்க முடியாது. விண்வெளியில் இருக்கும் நட்சத்திரங்களை அதன் வெளிச்சத்தை வைத்து அளவிடுவார்கள். இதற்கு 'மேக்னிடியூட்'(magnitude scale) என்கிற அளவீடு பயன்படுத்தப்படும். இந்த அளவீட்டின்படி +8 மற்றும் +7ம் எண் கொண்ட நட்சத்திரங்கள் மிக குறைந்த அளவு வெளிச்சம் கொண்டவை. இதுவே +4, +5 எண்களை கொண்டிருந்தால் அது அதிக அளவு வெளிச்சம் கொண்டவை. இவற்றை வெறும் கண்களால் நம்மால் பார்க்க முடியும். இதுவே -1, -2 என எண்கள் குறைந்தால் அவை மிகவும் பிரகாசமானவை என்று கருதலாம். உதாரணமாக பௌர்ணமி அன்று நமது நிலவின் ஒளி -12.5 என்கிற அளவில் இருக்கும்.

செயற்கைக்கோள்
ஆனால் சமீப காலங்களாக ஸ்பேஸ் எக்ஸ், ஏஎஸ்டி போன்ற நிறுவனங்கள் ஏவியுள்ள செயற்கைக்கோள்கள் +1, +2 என்கிற அளவுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் இந்த செயற்கைக்கோள்களுக்கு பின்னால் மற்றும் இதற்கு பக்கத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்ப்பதில் சிரமம் எழுந்திருக்கிறது. இதுவே 2100ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வரும். எனவே நம்மால் மற்ற கிரகங்களை ஆய்வு செய்வதில் சிக்கல் எழும். இது ஒளி மாசு போன்று அல்ல. நகரங்களில் ஒளி மாசு இருந்தால் கிராமங்களுக்கு சென்று வானத்தை பார்க்கலாம். ஆனால் பூமி முழுவதும் செயற்கைக்கோள்கள் சூழ்ந்து இருந்தால் நாம் எங்கு சென்று வானத்தை பார்ப்பது?

தொலைநோக்கி
வெறும் கண்ணால் பார்ப்பதிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது அதிக உணர்திறன் கொண்ட தொலைநோக்கிகள் இதை விட அதிகமான நெருக்கடியை சந்திக்கும். ஏனெனில் இந்த தொலைநோக்கிகள் magnitude scale அளவில் +25 அளவுக்கு மிகக் குறைவான வெளிச்சம் கொண்ட நட்சத்திரங்களை பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த செயற்கைக்கோள்களின் வெளிச்சம் அதீத பாதிப்பை ஏற்படுத்தும். மட்டுமல்லாது பூமியின் குறைந்த உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் உடைந்து விழும்போது இதேபோன்று அதிக வெளிச்சத்தை உருவாக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications