கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச்சூடு.. தெறித்து ஓடிய மக்கள்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்
நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று (நவ.22) இரவு மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் மக்கள் துப்பாக்கிச்சூட்டால் உயிரிழக்கின்றனர். கடந்த 2022ம் ஆண்டு மட்டும் சுமார் 45,222 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வால்மார்ட்
இவ்வாறு இருக்கையில்தான் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வால்மார்ட் கடையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்றிரவு கடைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். நுழைந்ததும் பொருட்களை வாங்குவதை போல அங்கும் இங்கும் திரிந்துள்ளார். சிலர் இவரின் நடத்தையின் மீது சந்தேகமடைந்துள்ளனர். ஆனால் புகார் அளிக்கவில்லை. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அவர் வெளியில் எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு
இதில், நாலபுறமும் குண்டுகள் பறந்துள்ளன. பொருட்களை வாங்க வந்த வயதானோர், பெற்றோர்களுடன் வந்த சிறுவர்கள், இளைஞர்கள் என பலரையும் குண்டு பதம் பார்த்துள்ளது. எல்லாம் கண்ணிமைக்கும் நொடியில் நடந்து முடிந்துள்ளது. சம்பவம் நடந்தது இரவு 10:12 மணி. பின்னர் காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவர்கள் விரைந்து வந்து பார்ப்பதற்குள் இங்கு ஒரு 'போரே' நடந்து முடிந்திருக்கிறது. கடையில் இருந்த பொருட்கள் எல்லா இடங்களிலும் சிதறி கிடந்திருக்கிறது. கால் வைத்த இடமெல்லாம் ரத்த வெள்ளமாக இருந்திருக்கிறது.

உயிரிழப்பு
வால்மார்ட்டை அனைத்து பக்கத்திலிருந்தும் காவல்துறையினர் சுற்றி வளைத்த பின்னர் உள்ளே சென்று பார்த்ததில், ஒரு சிலர் பிணமாக இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் நிச்சயம் 10 பேருக்கும் குறைவானவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும், இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவரும் உயிரிழந்திருக்கிறார் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

புதியதல்ல
இவ்வாறு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அமெரிக்காவில் ஒன்றும் புதிதல்ல. மேற்குறிப்பிட்டதைப் போல ஒரு ஆண்டில் மட்டுமே சுமார் 45,222 பேர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உயிரிழந்திருக்கின்றனர். அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 123 பேர் உயிரிழக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 5 பேர் என இந்த உயிரிழப்புகள் தொடர்கிறது. கடந்த ஆண்டில் இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications