அமெரிக்காவை உலுக்கிய மோடியின் சிங்கிள் போட்டோ.. ஸ்டன் ஆகி நின்ற டிரம்ப்.. உலக அரசியலே மாறுதே
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்தியக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மீது 50% வரி விதித்ததன் மூலம் அமெரிக்க-இந்தியா உறவுகளை டிரம்ப் பாதித்துவிட்டதாகவும், இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தள்ளியுள்ளதாகவும் போல்டன் கூறியுள்ளார்.
முக்கியமாக எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் - ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். இவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. இவர்கள் ஒன்றாக உள்ள புகைப்படம் அமெரிக்க அரசியலை உலுக்கி உள்ளது. உலக அரசியலின் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை உலுக்கிய மோடி போட்டோ
எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்ட முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், "வெள்ளை மாளிகை அமெரிக்க-இந்தியா உறவுகளை பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டது. மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தூண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் டொனால்ட் டிரம்ப்பிற்கு மாற்றாக பெய்ஜிங் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் விதித்த வரிகள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நாடுகள் இவ்வளவு காலம் மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளை தகர்த்துவிட்டதாக போல்டன் சாடினார். சோவியத் யூனியனுடனான (ரஷ்யா) இந்தியாவின் பனிப்போர் கால உறவை முடிவுக்குக் கொண்டுவரவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைச் சமாளிக்கவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சித்தன.. ஆனால் அதை எல்லாம் டிரம்ப் இப்பொது நாசம் செய்துவிட்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் ராஜதந்திர ரீதியாக இத்தனை காலம் அமெரிக்கா அடைந்த சாதனைகளை பலவீனப்படுத்திவிட்டதாக போல்டன் கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு ரீதியான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது புதிய வேர்ல்டு ஆர்டருக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வர்த்தக தடைகளை இந்தியா எதிர்க்கும் நிலையில் ரஷ்யா - சீனாவுடன் இந்தியா நெருக்கமாகி உள்ளது. இது உலக அளவில் புதிய அதிகார சமநிலையை (New World Order) உருவாக்கும் சாத்தியக்கூறுகளையும் ஏற்படுத்தலாம் என்றும் கருதுகின்றனர்.
தற்போதைய உலக நிலை என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதிக்கம், ஆசியாவில் சீனா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு, சீனா - ரஷ்யா இடையேயான நட்பு ஆகியவற்றின் கலவையாகும். இந்தச் சூழலில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே உலக சட்டத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறினால், அது ஒரு புதிய அதிகார சமநிலையாக இருக்கும். அதாவது அமெரிக்காவின் வீழ்ச்சியாக அது இருக்கும். இத்தகைய மாற்றங்கள் உலகப் போரின் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியா SCO மாநாடு
சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த 2025 SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் கைகோர்த்து சிரித்தபடி இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் இதை ஒரு திருப்புமுனை சந்திப்பு மற்றும் புதிய அதிகார சமநிலையின் தோற்றம் என்று வர்ணிக்கின்றனர்.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகத் தடைகள் மற்றும் இந்தியாவின் மீதான விமர்சனங்கள் காரணமாக, இந்தியா அமெரிக்காவிற்கு எதிரான சீனா மற்றும் ரஷ்யாவின் அணியில் இணைந்துள்ளது. இது ஆரம்பத்தில் ஒரு நிலைப்பாடாக இருந்தபோதிலும், இந்தியா இதை இப்போது தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. இந்தியாவிற்கு ஆதரவாக சீனாவும், ரஷ்யாவும் களமிறங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து உள்ள நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா களமிறங்கி உள்ளது.
இந்தியாவிற்கும் - சீனாவிற்கு நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அமெரிக்க வரி சர்வாதிகார விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கி உள்ளது. அதேபோல் இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கிறது.
இந்தியா மீது கூடுதல் வரி
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்தியாவிற்கு ஆதரவாக வரும் ரஷ்ய அதிபர்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் வியாழக்கிழமை அன்று மாஸ்கோவில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பிற்கான தேதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனினும், இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் இந்தச் சந்திப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிகழக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அதிபர் புடின் இந்தியாவிற்கு வருவது குறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்த தோவல், "எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான, நீண்டகால உறவு உள்ளது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். உயர்மட்ட அளவிலான ஈடுபாடுகள் பெரிய அளவில் பங்களித்துள்ளன. அதிபர் புடின்இந்தியாவிற்கு வரும் செய்தி கேட்டு நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். தேதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார். இப்படி 3 நாட்டு தலைவர்கள் நெருக்கமாகி உள்ளது அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications