வந்தே மாதரம் பேரணி.. பாரம்பரிய உடை அணிந்து படுகர் இன மக்களுடன் நடனமாடிய வானதி சீனிவாசன்!
நீலகிரி: சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகர் இன மக்களுடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடியுள்ளார்.
ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!
சுதந்திர தினக் கொண்டாட்டம்
இதனால் வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலை முதலே சுதந்திர தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு பகுதிகளிலும் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவுகளும் போற்றப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
வந்தே மாதரம் பேரணி
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பாஜக மகளிர் அணி சார்பாக சுதந்திர தின வந்தே மாதரம் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். கோத்தகிரிக்கு வருகை தந்த அவருக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து படுகர் இன பெண்களுடன் நடனமாடினார்.
வானதி சீனிவாசன்
தொடர்ந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், நாட்டின் 76வது சுதந்திர தினம், திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளைப் போல கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை துதி பாடும் இயக்கம் பாஜக கிடையாது. எங்களுக்கு தேசம் தான் முக்கியம். மக்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்கும் கட்சியாக எங்கள் கட்சி இருந்து வருகிறது.
பாஜக பற்றி வானதி
மக்களின் வரிப்பணம் வீணாக கூடாது என்ற நோக்கில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை சீர்திருத்தம் செய்யும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை மத்திய அரசு மட்டும் முடிவு செய்வதில்லை. கவுன்சில் இருக்கிறது. மாநில அரசுகள் ஒத்துழைத்தால் மட்டுமே ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தார்.