5 மணி நேரத்தில் 46 கி.மீ தூரம்தான்.. நாட்டிலேயே இவ்ளோ மெதுவா போகும் ரயில் தமிழகத்தில்தான் ஓடுகிறது!
ஊட்டி: இந்தியாவின் வேகமான ரயில் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் நாட்டின் மெதுவான ரயில் குறித்து பெரியதாக இப்படி செய்திகள் வருவதில்லை.
46 கி.மீ தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்கும் நம்ம தமிழகத்தில் ஓடும் ஒரு ரயில்தான் அந்த பெருமையை! பெற்றுள்ளது. அது என்ன ரயில், ஏன் அப்படி மெதுவாக போகிறது என்ற ஆர்வம் உள்ளதா?
விடை இதுதான். ஊட்டி ரயில்தான் இந்தியாவின் மிக மெதுவான ரயிலாம். இந்த ரயில் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. இதோ உங்கள் பார்வைக்காக.
ரயில் பயணம்
உலகில் அதிவேகமாக இயங்கும் ரயில்கள் பல உள்ளன. இதில் ஜப்பான் நாட்டின் 'ஷிங்கன்சென் H5' எனும் ரயிலும் ஒன்று. ஆனால் இந்த 'ஷிங்கன்சென் H5' ரயிலை விட, ஃபுஜி (Fuji) மலை மீது ஏறும் நத்தைதான் மிக அற்புதமான விஷயம் என அந்நாட்டு மக்கள் சொல்வதுண்டு. அந்த வகையில் இந்தியாவில் வேகமான ரயிலான வந்தே பாரத்தை காட்டிலும், மிக மெதுவான ரயில்கள் மீது தற்போது அனைவரின் கவனமும் குவிக்கப்பட்டு வருகிறது. பயணங்கள் என்பது வெறுமென பயணிப்பதில் மட்டும் தொடங்கி முடிந்து விடுவதில்லைதானே? பயணத்தில்தான் நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம்.
மலையேறுதல்
இவ்வாறு இருக்கையில் அதி வேகமாக பயணிப்பது ஓரிரண்டு முறை உங்களுக்கு வியப்பை தரலாம். மெதுவாக பயணிப்பது என்பது ஒருபோதும் உங்களுக்கு சலிப்பை தராது என பயணிகள் பலர் தங்களது அனுபவத்தில் இவ்வாறு சொல்வதுண்டு. ஆக நீங்கள் மெதுவாக பயணிக்க வேண்டுமெனில் உங்களுக்கான சரியான இடம் ஊட்டிதான். ஏனெனில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரையுள்ள 46கி.மீ தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்க இந்த மேட்டுப்பாளையம் ஊட்டி நீலகிரி பாசஞ்சர் ரயில் மூலம் மட்டுமே முடியும். அதாவது இதில் நீங்கள் பயணிக்கும்போது நடந்து மலை ஏறுவதை போல இருக்கும்.
பழமை
இந்தியாவின் அதிவேக ரயிலின் வேகத்தை விட இந்த ரயிலின் வேகம் 16 மடங்கு குறைவு. மனிதனால் ஒருமணி நேரத்திற்கு சராசரியாக 6.5 கி.மீ எனும் வேகத்தில்தான் நடக்க முடியும். அதை விட இந்த ரயிலின் வேகம் கொஞ்சம் அதிகம் என்று வைத்துக்கொள்வோம். ஏறத்தாழ 113 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் இதற்கான திட்டத்தை 1854ம் ஆண்டு முன்மொழிந்தனர். ஆனால் இதற்கான பணிகள் 37 ஆண்டுகளுக்கு பின்னர் 1891ல் தொடங்கப்பட்டு 1908ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
டிக்கெட்
தற்போது நிறைய மாற்றங்களோடு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை யுனெஸ்கோ (UNESCO) பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. பழசுக்கு என்னைக்கும் மவுசு இருக்கும் என்பதைப் போல இந்த ரயில் பயணத்திற்கு டிக்கெட் கிடைப்பதும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதில் பயணிக்கும் போது 100 பாலங்கள், பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு, பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதியையும் கணடுகளிக்கலாம். எனவேதான் இந்த ரயில் மெதுவாக ஊர்ந்து ஏறுவதை உள்ளே இருப்பவர்களே ரசிக்கிறார்கள். கொஞ்சம் வேகமாக போனாலும் அட மெதுவா போங்கப்பா என அவர்கள் மைண்ட்வாய்ஸ் சொல்கிறது.
கட்டணம்
இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு ரயில் மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதேபோல ஊட்டியிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது. இதில் குன்னூர், வெலிங்டன், அரவங்காடு, கேத்தி மற்றும் லவ்டேல் ஆகிய முக்கிய ரயில் நிறுத்தங்களும் உள்ளன. முன்னர் இந்த ரயிலில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கு ரூ.470 என கட்டணம் இருந்த நிலையில் கடந்த 2020ல் இக் கட்டணம் ரூ.600ஆக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. என்ன பயணிகளே இந்தியாவின் மிக மெதுவான ரயிலில் மலை ஏற தயாரா?